கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு எத்தனை நாட்கள் லீவ்? வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Recommended Video
கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டது. ஓமிக்ரான் கொரோனா காரணமாக இந்த மூன்றாம் அலை ஏற்பட்டது.
நல்வாய்ப்பாக ஓமிக்ரான் கொரோனா லேசான கொரோனா பாதிப்பையே ஏற்படுத்தியது. மேலும், கொரோனா பரவல் விரைவில் கட்டுக்குள் வந்த நிலையில், கட்டுப்பாடுகளும் விரைவில் நீக்கப்பட்டன.

கொரோனா
கடந்த சில மாதங்களாகவே நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. தமிழ்நாட்டிலும் கூட வைரஸ் பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வந்தது. பல நாட்கள் தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கும் கீழ் பதிவாகி இருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது அடுத்த அலை குறித்த அச்சத்தை எழுப்பி உள்ளது.

ஓமிக்ரான்
இந்தியாவில் BA.2.75 என்ற புதிய ஓமிக்ரான் வகை கண்டறியப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்து இருந்தார். உலக சுகாதார அமைப்பும் கூட BA.2.75 கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பும் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் இதுவரை மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் இந்த BA.2.75 ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரித்து வரும் சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து மனிதவள மேலாண்மைத் துறை சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதேபோல கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள் குறித்தும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எத்தனை நாட்கள் லீவ்
இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்ட அறிக்கையில், "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலில் இருந்தாலும், சிகிச்சையில் இருந்தாலும் அத்தனை நாட்களும் சிறப்புத் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். மருத்துவரின் சான்றிதழ் அடிப்படையில் தனிமைப்படுத்தலில் இருந்த நாட்கள், சிகிச்சையில் இருந்த நாட்களுக்கு விடுப்பு வழங்கப்படும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள், அதற்கான அறிவிப்பைச் சமர்ப்பித்தால், அவர்களுக்கும் சிறப்புத் தற்செயல் விடுப்பு வழங்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications