எக்ஸ்ட்ரா லக்கேஜான காங்கிரஸ்.. ஆற்றில் போட்டாலும் அளவோடு போட திமுக முடிவு?.. எத்தனை தொகுதிகள்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊர் திருவிழா போல் தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்காவிட்டாலும் எப்படியும் மே மாதத்திற்குள் நடந்து விடும் என்பதால் களை கட்டியுள்ளது. ஆங்காங்கே சுவற்றில் விளம்பரம், பேனர்களுக்கு ஆர்டர் கொடுப்பது, பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஏற்பாடு என தொண்டர்கள் தேனீக்கள் போல் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. கூட்டணி கட்சியின் தலைமை இன்னமும் தொகுதி பங்கீடு குறித்து பேசாததால் கூட்டணி கட்சிகள் சற்று கலக்கத்தில் உள்ளன.
அறிவிப்பு
தொகுதி பங்கீடுகள் முன்கூட்டியே அறிவித்தால் அதில் கூட குறை இருப்பதை பேசி தீர்த்துக் கொள்ளலாம். திடீரென அறிவிக்கும்போது கூட்டணி கட்சிகளுக்கு அவசர கதியில் அள்ளி தெளித்த கோலம் போல் இருக்கும். அந்த வகையில் திமுக தனது முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கும் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ்
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் வெறும் 8 இடங்களில் அக்கட்சி வென்றுள்ளது. அதாவது பாதிக்கு பாதி தொகுதிகளில் கூட வெல்லவில்லை. மேலும் தேசிய அரசியல் என பார்த்தோமேயானால் அங்கும் காங்கிரஸ் சொல்லிக் கொள்ளும்படியாக சோபிக்கவில்லை.
ஒதுக்கீடு
காங்கிரஸால் திமுகவுக்கு தற்போதைய நிலையில் ராஜ்யசபா சீட் மட்டுமே லாபம். இதனால் காங்கிரஸ் கட்சி கடந்த உள்ளாட்சி தேர்தலின் போதிலிருந்தே கழற்றி விட இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அக்கட்சி தற்போது வரை கூட்டணியில்தான் இருக்கிறது. இதனால் கடந்த முறையை போல் இந்த முறையும் அக்கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படாது என சொல்லப்படுகிறது.
20 தொகுதிகள்
காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல்கள் சொல்லப்பட்டன. ஆனால் டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில் காங்கிரஸ் கட்சி வெறும் 15 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாகவும், அதில் ஓரிரு சீட்டுகள் கூட குறைய இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
குறைந்த தொகுதிகள்
மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டு தர வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் இந்த தொகுதி பங்கீடு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நேற்று வந்த கட்சிகள் கூட இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் தேவை எனும் போது பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சி மிகவும் குறைவான தொகுதிகளை பெற்றுக் கொண்டு கூட்டணியில் தொடருமா என்ற கேள்வி எழுகிறது.
என்ன நடக்கும்?
தேசிய அரசியலில் பெரிதாக வெற்றி பெற முடியாத காங்கிரஸ் தமிழகத்தில் தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற்காக கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இருக்கிறார்கள் என்ற அளவுக்காவது செல்ல வேண்டும் என்று எண்ணும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாகும்.