இதுவரை எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன? அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் இதுவரை எத்தனை நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்ய, அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் வேலப்பட்டி ராஜ வாய்க்காலை பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ராஜ வாய்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த பொதுநல வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜ வாய்க்கால் முறையாக தூர்வாரப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் ஏரி,குளம், கண்மாய் உள்பட எத்தனை நீர்நிலைகள் உள்ளன என கேள்வி எழுப்பினர்.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் எந்த துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
கடைசியாக இவை எப்போது தூர்வாரப்பட்டன, தூர்வாரும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டுமா அல்லது பொதுப்பணித்துறை செய்ய வேண்டுமா,என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ், இதுவரை எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன என்றும் நீதிபதிகள் வினவியுள்ளனர்.
மேற்கண்ட கேள்விகள் தொடர்பாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறைச் செயலாளர் ஆகியோர் வரும் ஜூலை 29-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications