ரஜினி வசிக்கும் போயஸ் கார்டனிலேயே.. தனுஷ் கட்டிய 150 கோடியில் மாளிகை.. வெளியான படங்களை கவனிச்சீங்களா!
ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டனில் கட்டப்பட்டுள்ள புதிய வீட்டிற்கு தனுஷ் தனது பெற்றோருடன் மாறி உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: தனுஷ் தனது பெற்றோருடன் தனது புதிய வீட்டிற்கு மாறி உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் வசிக்கும் அதே பகுதியான சென்னை போயஸ் கார்டன் பகுதியில் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய வீட்டைக் கட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தனுஷ் தனது குடும்பத்தினருடன் புதிய வீட்டிற்கு குடியேறினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக இருந்த காலத்தில் தொடங்கிய வீடு தான் இது. கடந்த 2021ம் ஆண்டு புதிய வீட்டிற்கான பணிகள் தொடங்கியது. அந்த பூஜையில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதற்கிடையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து விட்டனர். எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை போயஸ் கார்டனில் பணிகள் நடந்து வந்தது. இந்த வீட்டின் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

செல்வராகவன்
இந்நிலையில் தனுஷ் தன் பெற்றோருடன் புதிய வீட்டில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தனுஷின் இந்த பிரம்மாண்ட வீடு சுமார் ரூ.150 கோடியில் கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்களில் தனுஷின் குடும்ப உறுப்பினர்கள் பலர் இருக்கிறார்கள். எனினும் அவரது அண்ணன் செல்வராகவன் அந்த புகைப்படத்தில் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. ஏனெனில் புதிய படத்தில் செல்வராகவன் இருப்பது போன்ற படங்கள் வெளியாகவில்லை.

பிரம்மாண்ட மாளிகை
புதிய வீடு பால்காய்ச்சு பூஜைக்கான இந்த படங்களில், தனுஷ் நீல நிற குர்தா மற்றும் பைஜாமா அணிந்திருந்தார். அவரது பெற்றோர்களும் பாரம்பரிய உடைகளை அணிந்து காணப்பட்டனர். இயக்குனரும் தனுஷின் ரசிகர் மன்றத் தலைவருமான சுப்பிரமணியம் சிவாவும் அதில் இருந்தார். தனுஷ் தன்னோடு இருக்கும் புகைப்படங்களை சுப்பிரமணியம் சிவா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார், அவரது பிரமாண்டமான மாளிகை புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்,

உயர்ந்து விடுகிறார்
தனுஷ் உடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் சுப்ரமணியம் சிவா அதில் கூறியுள்ளதாவது: "தம்பி தனுஷின் புதிய வீடு. கோவில் உணர்வு எனக்கு. வாழும் போதே தாய், தந்தையை சொர்க்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள், தெய்வமாக உணரப்படுகிறார்கள். மேலும், தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும், எடுத்துகாட்டாகவும், உதாரணமாகவும், உயர்ந்து விடுகிறார்கள். இன்னும் பல வெற்றிகளும் சாதனைகளும் உன்னை துரத்தட்டும், உன்னை பார்த்து ஏங்கட்டும், உன்னை கண்டு வியக்கட்டும், வாழ்க தம்பி, வாழ்வாங்கு வாழ்க" என்று பதிவிட்டுள்ளார்.

அன்பு சிகரம் போல்
அவரது ரசிகர் ஒருவர் இந்த படத்தை பார்த்து, "சூப்பர் அண்ணா. மேலும் பல வெற்றிகளைப் பெற அவருக்கு வாழ்த்துகள். உங்களின் அன்பு சிகரம் போல உயர்ந்தது. வாழ்த்துக்கள் அண்ணா" என்று கூறியிருந்தார். "மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்" என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். "பெற்றோருக்கு இதை விட வேறு என்ன. உலகில் பேரின்பம் இருக்கப் போகிறது" என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாத்தி திரைப்படம்
வாத்தி திரைப்படம் ரிலீஸ் ஆன பின் தனுஷ் தான் பேசுப்பொருளாக காணப்படுகிறார். வாத்தி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இயக்குனர் பாரதிராஜா உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர். வாத்தி திரைப்படம் 90களின் இறுதியில் உருவானது போன்ற கதையாகும். கல்வித்துறையின் தனியார்மயமாக்கலின் தாக்கத்தையும், அதற்கு எதிராக போராடும் ஒரு வாத்தியாரையும் எடுத்துக்காட்டுகிறது. இப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி வாத்தி படம் தனது மாணவர் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். வாத்தி தனுஷ்க்கு படம் நன்றாக போகும் நிலையில், ரஜினிகாந்த் குடியிருக்கும் போயஸ் கார்டனிலேயே வீடு கட்டி குடியேறி இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications