டாக்டரை குத்திய விக்னேஷை மடக்கிப் பிடித்தது எப்படி? பரபர நிமிடங்கள்.. நடந்ததை விளக்கிய முத்து ரமேஷ்!
சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்ற இளைஞர் விக்னேஷை மடக்கிப் பிடித்தது எப்படி என கிண்டி மருத்துவமனை அலுவலக கண்காணிப்பாளர் முத்து ரமேஷ் விளக்கி உள்ளார். பரபரப்பான நிமிடங்கள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் மருத்துவர் பாலாஜி. இந்நிலையில் இன்று மருத்துவமனைக்கு வந்த இளைஞர் ஒருவர் மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை 2 முறை குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த மருத்துவர்: ரத்த வெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சரிந்து விழுந்துள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்ற நபரை மடக்கிப் பிடித்தனர். மேலும், ரத்த வெள்ளத்தில் சரிந்த மருத்துவர் பாலாஜியை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
பின்னர் இதுகுறித்து கிண்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை வளாகத்துக்கு விரைந்து வந்த கிண்டி போலீசார், பிடிபட்ட நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர் பெயர் விக்னேஷ் என்றும், அவரது தாய் பிரேமா கடந்தாண்டு மே முதல் நவம்பர் மாதம் வரை, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் நிபுணர் மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.
ஆனால், அவரது தாய்க்கு சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை, வெளிநோயாளி பிரிவில் மருத்துவரை சந்திக்க 4 பேருடன் விக்னேஷ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது சுமார் அரை மணி நேரம், மருத்துவர் பாலாஜியிடம் பேசிக்கொண்டிருந்த விக்னேஷ், திடீரென தான் கொண்டு சென்றிருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தியுள்ளார்.
அலுவலக கண்காணிப்பாளர் பேட்டி: விக்னேஷை மடக்கிப் பிடித்தது குறித்து கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் அலுவலக கண்காணிப்பாளர் முத்து ரமேஷ் கூறுகையில், "மருத்துவமனையின் இயக்குநர் அறையில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மருத்துவர் ஒருவர் வந்து புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திவிட்டதாக கூறினார்.

நான்தான் குத்தினேன்: உடனடியாக அவரது அறைக்கு ஓடினேன். அப்போது அவரை குத்தியவர் கையில் கத்தியுடன் தப்பித்து செல்லப் பார்த்தார். இதனையடுத்து நாங்கள் அவரை மடக்கிப் பிடித்தோம். மேலும் ஒரு மருத்துவர் வந்து அவரை பிடித்தார். அப்போது அந்த இளைஞர், "ஆமா.. நாந்தான் குத்துனேன்.. என்ன பண்ணுவீங்க? போலீஸ் வரட்டும் நான் பார்த்துக்கிறேன்" எனக் கூறினார்.
அதைத்தொடர்ந்து போலீசார் வந்து மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியவரைப் பிடித்துச் சென்றனர். மருத்துவர் பாலாஜிக்கு கழுத்து உள்ளிட்ட பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதால் ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவரை உடனடியாக அறுவை அரங்கிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications