உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் எப்படி வரவேற்பு? செனடாப் சாலையை எட்டிய ஹேப்பி ரிப்போர்ட்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் தகவல் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சிக் கொள்ளச் செய்துள்ளதாம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலை காட்டிலும் இப்போது உதயநிதியை காண கூட்டம் அதிகம் திரளுவது பற்றி மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்.
தனது தாத்தா கருணாநிதி பாணியில் கேலி,கிண்டல்,நையாண்டி, என நவரசமாக பேசி எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் உதயநிதி.

திமுக இளைஞரணி
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து இடைவிடாத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தை தனது சொந்த தொகுதியான சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய அவர் இன்று மாலை கோவை மாவட்டத்தில் நிறைவு செய்கிறார். இடைபட்ட நாட்களில் திருச்சி, தஞ்சை, கடலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, என 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.

நீட் விலக்கு
இந்நிலையில் வழக்கமான அரசியல்வாதிகளை போல் இல்லாமல் மக்கள் மத்தியில் அவர் இயல்பாக பேசுவதும், ஒரு சில இடங்களில் ஆயிரம் ரூபாய் விவகாரத்தை மையப்படுத்தி கேள்விகள் எழுப்பிய போது அதற்கு சாமர்த்தியமாக பதில் அளித்ததும் அவருக்குள் இருக்கும் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதேபோல் நீட் விலக்கு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் வார்த்தைப் போரும் நடைபெற்றது.

கூலாக பேசி
மொத்தத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கள் ஊடகங்களில் இடம்பிடிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. குறிப்பாக கரூர், தஞ்சை மாவட்டங்களில் ஆயிரம் ரூபாய் எப்போது வரும் என பெண்கள் எழுப்பிய கேள்விக்கு தனது தாத்தா கருணாநிதியை போல், ஒரு இடத்தில் கூட டென்ஷன் ஆகாமல் கூலாகவே அவர் பேசி பதிலளித்ததும், நீட் உள்ளிட்ட பல விவகாரங்களில் பாஜகவுக்கு எதிராக ஆக்ரோஷமாக அவர் காட்டிய உறுதியும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக ரீச் கிடைத்திருக்கிறது.

கூட்டம் அதிகம்
கடுமையான அரசுப்பணிச்சுமைகள் இருப்பதால் காணொலி மூலம் பரப்புரை செய்து வரும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் பிரச்சார பேச்சுக்களை ஆர்வமுடன் தினமும் பார்த்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை காணவும், அவர் பேச்சைக் கேட்கவும் கூடிய கூட்டத்தை விட உதயநிதிக்கு அதிக கூட்டம் கூடும் தகவலும் காவல்துறையினர் மூலம் மேலிடத்திற்கு சென்றிருக்கிறது. இதனால் முதல்வர் ஸ்டாலின் உட்பட அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவிக்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications