அதிகரிக்கும் கொரோனாவிலும் விடாது பொங்கல் ஷாப்பிங்.. நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்.. திணறும் தி.நகர்
சென்னை: கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஒரே இடத்தில் அதிகப்படியான மக்கள் குவிந்ததால், அதிகப்படியான பேருக்கு கொரோனா அபாயமான சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதத்திற்குப் பின்னர், குறைந்து வந்த வைரஸ் பாதிப்பு இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஓமிக்ரான் பரவல் காரணமாக வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே, மத்திய அரசும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

இரவு ஊரடங்கு
அதன்படி தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் 10 மணி முதல் காலை 5 மணி வரை வணிக வளாகங்கள் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதற்கு முன்பு தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஞாயிறு ஊரடங்கு
அதேபோல, நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், பெட்ரோல் பங்கு தவிர மற்ற அனைத்தும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபடவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றில் பறந்த விதிகள்
நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்றைய தினம் பல இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, பொங்கல் விழாவுக்கு முன்பு வரும் கடைசி வார இறுதி நாள் என்பதால், இன்றைய தினம் பொங்கல் பொருட்களை வாங்க மக்கள் மார்கெட்களில் அதிகளவில் குவிந்தனர். மாஸ்க், தனிமனித இடைவெளி ஆகியவற்றை முறையாக கடைப்பிடிக்காமல் ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் குவிந்ததால் கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை தியாகராயர் நகர்
குறிப்பாக இன்று கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் சென்னை தியாகராயர் நகர் கடை வீதிகளில் ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் குவிந்தனர். இது தொடர்பான வீடியோ, ஃபோட்டகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதில் பொதுமக்கள் பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமலும் தியாகராயர் நகர் கடை வீதிகளில் குவிந்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் பாசிட்டிவ் விகிதம் அச்சமூட்டும் வகையில் 14.2ஆக உள்ள நிலையில், பொதுமக்களின் இந்த அலட்சியத்தால் வைரஸ் பரவல் மேலும் வேகமெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications