கணவனின் ஒரு நொடி ஆத்திரம்.. சென்னை கொரட்டூரில் மனைவியின் உயிரே போனது.. பரிதவிக்கும் குழந்தைகள்
சென்னை: சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரத்தில் மனைவி வேலைக்கு செல்வதை விரும்பாத கணவர் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, மனைவியை கத்தியால் குத்திக்கொன்று சிறைக்கு போய் உள்ளார். இதனால் 14 வயது மற்றும் 9 வயதில் உள்ள இரண்டு மகன்கள் பெற்றோரை இழந்து தவிக்கிறார்கள்..
சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்த 42 வயதாகும் சுரேஷ் மளிகை கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி சியாமளா தேவி , 36 வயது ஆகிறது. இவர்களுக்கு 14 ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

சுரேஷ் கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால் மளிகை கடை கொஞ்சம் கொஞ்சமாக நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடத்த முடியாத அளவிற்கு நஷ்டம் வந்ததால் சுரேஷ் மளிகை கடையை மூடிவிட்டார். இதனால் அவருடைய மனைவி சியாமளா தேவி வீட்டின் வறுமையை போக்க வேண்டும் என்று நினைத்து அருகே உள்ள இ-சேவை மையத்தில் கடந்த 10 நாட்களாக வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.
மனைவி வேலைக்கு செல்வது சுரேசுக்கு பிடிக்கவில்லை. வேலைக்கு போகக்கூடாது என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் சியாமளா வீட்டின் வறுமை காரணமாக கேட்கவில்லை. இதனிடையே குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ், சியாமளா தேவியின் நடத்தையில் சந்தேகப்பட தொடங்கி உள்ளார். இதனால் கணவன்-மனைவிக்குள் கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று அதிகாலை கணவன்-மனைவி இடையே வேலைக்கு செல்லும் விஷயத்தில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் , சுரேஷ், ஆத்திரத்துடன் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் சியாமளா தேவியின் தொண்டையில் குத்தியிருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த சியாமளா தேவி, ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்துபோனார்..
மகன்கள் தூங்கி கொண்டிருந்த நிலையில்,, மனைவியை ஆத்திரப்பட்டு கொன்றுவிட்டதை உணர்ந்த சுரேஷ், மனைவியின் உடலை படுக்கை அறையில் வைத்துவிட்டு வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பி ஓடிவியிருக்கிறார். காலையில் தூங்கி எழுந்த மகன்கள் இருவரும், படுக்கை அறையில் தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதுள்ளனர்.
வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டி இருந்ததால் அவர்களால் வெளியே வரமுடியாமல் தாயின் உடலை பார்த்து கத்தி கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சியாமளா தேவி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி உடனே அக்கம் பக்கத்தினர் கொரட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து கொலையான சியாமளா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுரேசை தேடி வந்தனர். இந்நிலையில் சுரேஷ், கொரட்டூர் கேனல் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறத்தில் ரத்த கறை படிந்த சட்டையுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்திருக்கிறார். போதை தலைக்கேறியதும் அங்கிருந்தவர்களிடம், தான் மனைவியை கொன்றுவிட்டதாக கதறி அழுதபடி கூறியுள்ளார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கொரட்டூர் போலீசார் அங்கு சென்று சுரேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். சந்தேகத்தால் மனைவியை கொன்று விட்டு கணவன் சிறைக்கு சென்று விட்ட நிலையில், அவர்களின் 2 மகன்களும் தங்களை கவனிக்க யாரும் இல்லாமல் பரிதவித்து வருகிறார்கள். மது போதையும், சந்தேகமும் அழகான குடும்பத்தை ஒன்றுமில்லாமல் சிதைத்துவிட்டது. மதுப்பழக்கம் உண்மையில் மோசமானது.. போதையில் ஏற்படும் கோபமே பல கொலைகளுக்கு காரணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications