நான் ஒரு பெரியாரிஸ்ட்.. திமுகவில் இணைந்தது ஏன்? நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா அளித்த பதில்!
சென்னை: திமுகவில் இணைந்தது ஏன் என்ற கேள்விக்கு நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா விளக்கம் அளித்துள்ளார். பெரியாரின் கொள்கைகள் மீது சிறுவயதில் இருந்தே ஈர்ப்பு இருப்பதாக கூறிய அவர், திமுக கொண்டுள்ள புதுமைப் பெண், காலை உணவுத் திட்டங்கள் மிகச்சிறந்த ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு திராவிட அரசியல் ஆதரவாளராக நடிகர் சத்யராஜ் இருந்து வருகிறார். திமுகவின் ஏராளமான மேடைகளில் தோன்றி பேசியுள்ள சத்யராஜ், அண்மையில் பெரியாரை கடுமையாக விமர்சித்த சீமானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் இருந்து சீமானுக்கு கண்டனம் தெரிவித்த 2 பேரில் சத்யராஜும் ஒருவர்.

கடவுள் மறுப்பு, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட கருத்துகளை தனது படங்களிலும் சத்யராஜ் பேசி வருபவர். இந்த நிலையில் சத்யராஜின் மகள் திவ்யா நேரடியாகவே திமுகவில் இணைந்துள்ளார். ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா, கடந்த சில ஆண்டுகளாகவே நேரடி அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு 14 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சத்யராஜ் மகள் திவ்யா நேரடி அரசியலுக்கு வந்திருக்கிறார். இதுகுறித்து திவ்யா பேசுகையில், நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். எப்போதும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். திமுக ஆரோக்கியத்திற்கு மரியாதை கொடுக்கும் கட்சி. அதற்கு முக்கிய உதாரணம் காலை உணவுத் திட்டம்.
அதேபோல் திமுக பெண்களுக்கு மரியாதை அளிக்கும் கட்சி. அதற்கு புதுமைப் பெண் திட்டம். அனைத்து மதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியும் திமுக தான். திமுகவின் அனைத்து கொள்கையையும் பிடித்தமான விஷயம் தான். சிறுவயதில் இருந்தே திமுக கொள்கைகளில் ஈர்ப்புண்டு. மக்கள் பணி செய்வது பிடிக்கும்.
சில மாதங்களுக்கு முன் மகிழ்மதி இயக்கம் என்று ஒன்றை தொடங்கினேன். அந்த அமைப்பு மூலமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கினோம். அதேபோல் மக்கள் பணிகளை தொடர்வேன். மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு என் தந்தை சத்யராஜ் ஒரு உதாரணம். அவரிடம் இருந்து தான் அனைத்தையும் கற்றுக் கொண்டேன்.
நானும் ஒரு பெரியாரிஸ்ட். பெரியாரின் கொள்கைகளில் ஈர்ப்பு கொண்டவள். தற்போதைய ஆட்சியில் திமுக கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தும் சிறந்தது. கொரோனா காலத்தில் பேரணி செல்லலாம், மாடியில் இருந்து கை தட்டலாம், விளக்கேற்றலாம் என்று மற்றவர்கள் கூறிய போது, அப்போது பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக சூழலை கையாண்டார். கட்சி சார்பாக என்ன பொறுப்பு அளிக்கப்பட்டாலும், அதற்கு உண்மையாக இருந்து பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications