"அப்பா கருணாநிதி இல்லாத இடத்தில், அண்ணா நான் உங்களை வைத்து பார்க்கிறேன்" உருகிய கனிமொழி!
சென்னை: அப்பா கருணாநிதி இல்லாத இடத்தில் அண்ணன் ஸ்டாலினை வைத்து பார்ப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உருக்கமாக பேசியுள்ளார்.
சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தலைவராக 2வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தக் கூட்டத்தில் திமுகவின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது திமுக நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
'உழைப்பு உழைப்பு உழைப்பு - அதுதான் மு.க.ஸ்டாலின்’ - கருணாநிதி நினைவிடத்தில் ஸ்பெஷல் அலங்காரம்!
கனிமொழி பேச்சு
இதனைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் கனிமொழி பேசுகையில், 1947ல் ராபின்சன் பூங்காவில் திமுக தொடங்கப்பட்ட போது, பெரியாருக்கும் திமுக தலைவருக்கும் இடையில் இருந்த இடைவெளி, அண்ணாவின் மனதை உருத்திக்கொண்டே இருந்தது. அந்த மேடையில் அவர் பேசும்போது நாம் இயக்கத்தை நடத்தக் கூடிய விதம் என்பது, பெரியாரை ஆறுதல்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று சூளுரைத்தார்.
கனவை நிறைவேற்றிய கருணாநிதி
அதேபோல் 1967ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது சுயமரியாதை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது, தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்தது என தொடர்ந்தது. அது பெரியாரால் பாராட்டக் கூடிய ஆட்சியாக உருவாக்கினார்கள். 1967ல் ஆட்சி வந்த போது, ஆட்சி வந்துவிட்டது, கட்சி போய்விட்டது என்று அண்ணா பேசியதாக கூறுவார்கள். ஆனால் அந்த பயத்தை, சந்தேகத்தை கருணாநிதி கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து இயக்கத்தின் கனவுகளை நிறைவேற்றினார்.
பரம்பரை பகைவர்கள்
அவருக்கு பின் தமிழ்நாட்டில் வெற்றிடம் உருவாகிவிடும் என்று சொன்னார்கள். வெற்றிடம் உருவாக வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டார்கள். நமது கொள்கைகளுக்கு எதிராக ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிவிடலாம் என்று பரம்பரை பகைவர்கள் கனவு கண்டார்கள். ஆனால் அந்த சாம்ராஜ்ஜியங்களை எல்லாம் தகர்க்கக் கூடிய வகையில், மு.க.ஸ்டாலின் எழுந்து நின்றார்.
சனாதன சக்திகள்
அரசியல் வெற்றிகள் என்பது மட்டுமல்லாமல், கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் செயல்பட்டு வருகிறார். நமது பிள்ளைகள் கல்வி கற்க சென்று 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், சனாத சக்திகள் பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று செயல்படுகிறார்கள். அனைவருக்கும் திராவிட மாடல் ஆட்சி சம உரிமையை வழங்கி வருகிறது. ஆனால் அதற்கு எதிராக சனாதன சக்திகள் செயல்பட்டு வருகிறது.
அப்பா இடத்தில் அண்ணா
மு.க.ஸ்டாலினின் தலைமையிலான போராட்டம் அரசியல் வெற்றிக்கான போராட்டம் இல்லை. இது சுயமரியாதைக்கான போராட்டம். அந்தப் போராட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அண்ணா, அப்பா இல்லாத இடத்தில் நான் உங்களை வைத்து பார்க்கிறேன். உங்கள் வழியில் நீங்கள் எடுத்து வைக்கக்கூடிய வழிகளில், தேர்ந்தெடுக்கக் கூடிய போராட்டங்கள் அனைத்திலும் அணிவகுக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.