"நான் நலமாக உள்ளேன்.." கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி பேசும் வீடியோ வெளியீடு!
சென்னை: "நான் நலமாக உள்ளேன்.. பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டுள்ளதால் இதய பரிசோதனை நடைபெற உள்ளது" என கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தனது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர் பாலாஜி கூறினார். சென்னை கிண்டி மருத்துவமனையில் இன்று அமைச்சர் மா சுப்பிரமணியன் மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் சிறப்பு மருத்துவராக டாக்டர் பாலாஜி (வயது 53) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 10.30 மணியளவில் வழக்கம் போல பணியில் இருந்த போது, அவரது அறைக்குள் நுழைந்த இளைஞர், டாக்டர் பாலாஜியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து மறைத்து கொண்டு வந்த கத்தியால் டாக்டர் பாலாஜியை 7 இடங்களில் வெட்டினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் டாக்டர் பாலாஜி சரிந்தார். அவரை உடனடியாக மீட்ட மருத்துவமனை ஊழியர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர் பாலாஜியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது அமைச்சருடன் மருத்துவர் பாலாஜி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், "நல்லா ஸ்டேபிளாக உள்ளேன்.. இதய செக்கப் மட்டும் செய்ய வேண்டும். பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டுள்ளதால் இதய பரிசோதனை மட்டும் செய்யப்பட உள்ளது.. இப்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். காயங்கள் உடலில் ஏற்பட்டு இருந்ததால் ஆண்டி பயோட்டிக் போடப்பட்டிருக்கிறது" இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசினார்.
முன்னதாக மருத்துவர் பாலாஜியை கத்தியால் வெட்டிய இளைஞர் விக்னேஷை, மருத்துவமனை ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் விக்னேஷ் அடைக்கப்பட்டுள்ளார். தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவர் மீது விக்னேஷ் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
அவரது தாய்க்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அரசு மருத்துவர் மீதான தாக்குதல் சம்பவம் நேற்று நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கிண்டி மருத்துவமனையில் இன்று போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications