எடப்பாடி ஒரு சர்வாதிகாரி.. பிக் பாக்கெட் அடிப்பது போல் பொதுச்செயலாளராக நினைக்கிறார்.. ஓபிஎஸ் பேட்டி!
எடப்பாடி பழனிசாமியை போல் ஒரு சர்வாதிகாரியை பார்த்ததில்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை: பிக் பாக்கெட் அடிப்பது போல் பொதுச்செயலாளர் பதவியை பெற நினைக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். பிஎஸ்-க்கு ஆதரவாக விதிகளை மாற்றியமைத்து தேர்தலை அறிவித்துள்ளதாக கூறிய ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும், கட்சியை மீட்டெடுப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதில், அதிமுக சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு-2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு "கட்சியின் பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்ற விதிமுறைக்கு ஏற்ப கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஓபிஎஸ் பேட்டி
இந்த நிலையில் சென்னையில் ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிமுகவின் கழக அமைப்பு ரீதியான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே விதி. அதேபோல் தலைமையில் உள்ளவர்களை அடிப்படை தொண்டர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

பிக் பாக்கெட் அடிப்பது போல்..
பின்னர் தலைமை தான் கிளை கழக தேர்தலை நடத்த வேண்டும். அதேபோல் தேர்தல் நடத்துவதற்கு முன்பாக உறுப்பினர் படிவம், அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்க வேண்டும். அதுதான் அதிமுகவின் சட்டவிதி. ஆனால் எதுவும் முறைப்படி இல்லாமல், பிக் பாக்கெட் அடிப்பது போல் பொதுச்செயலாளர் பதவியை பெற நினைக்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதா?

தண்ணீர் பாட்டிலால் அலர்ஜி
ரவுடிகளை வைத்துக் கொண்டு நிகழ்ச்சி நிரல் இல்லாமல் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. பொதுக்குழு நடந்தபோது, அராஜகம் நடைபெற்றது. அந்தப் பொதுக்குழுவின் போது, தண்ணீர் பாட்டில் எங்கிருந்து வந்தது என்று அனைவருக்கும் தெரியும். தண்ணீர் பாட்டிலை கண்டாலே அலர்ஜியாக உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை பொதுக்குழுவை அங்கீகரிக்கவில்லை. அதேபோல் ஜூலை மாதத்தில் நடந்த பொதுக்குழுவை எதிர்த்து தான் நீதிமன்றம் சென்றோம். அதன்பின்னர் மக்கள் மன்றத்திலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் எடப்பாடி பழனிசாமி. அதுதான் நிதர்சனமான உண்மை.

இது நியாயமா?
சாதாரண தொண்டர் கூட பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்ற விதியை மாற்றியவர்தான் எடப்பாடி பழனிசாமி. தானும் தன்னை சுற்றியுள்ளவர்களும் பதவிக்கு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கட்சி விதிகளை மாற்றியது எந்த விதத்தில் நியாயம்? தமிழ்நாட்டில் இதுவரை எடப்பாடி பழனிசாமி போல் ஒரு உச்சபட்ச சர்வாதிகாரியை பார்த்தது இல்லை. இபிஎஸ் தரப்பினர் நாசகார சக்தி என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவோம்.

எதிர்ப்பலை பாயும்
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருந்த மாட்டார்கள், மூர்க்கத்தனமாகதான் இருப்பேன் என்று இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு எங்கு சென்றாலும் எடப்பாடி பழனிசாமியை நோக்கி எதிர்ப்பு அலை பாயும். மதுரை விமான நிலையத்தில் நிகழ்ந்தது போல் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பலை உள்ளது. அதனை அவரே உருவாக்கி வைத்துள்ளார். ஆனால் அதிமுக தொண்டர்கள் பயப்பட வேண்டும். நாங்கள் நிச்சயம் கட்சியை மீட்டெடுப்போம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications