விதையை போட்டுவிட்டேன்... நீங்க தான் அறுவடை செய்ய வேண்டும்.. ஹேப்பி நியூ இயர் வாழ்த்து சொன்ன கமல்
Recommended Video
சென்னை: நான் விதையை போட்டுட்டேன். நீங்க தான் அதை அறுவடை செய்ய வேண்டும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 2019 புத்தாண்டை அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்தில் 2019 புத்தாண்டு குதூகலத்துடன் பிறந்ததையொட்டி அந்நாட்டு மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர்.
நியூசிலாந்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது. ஆஸ்திரேலியா முழுவதும் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். தொடர்ந்து ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் படிப்படியாக புத்தாண்டில் நுழைந்து வருகின்றன.
இந்தியாவிலும் 2019ம் ஆண்டை வரவேற்று தலைநகர் டெல்லி, வர்த்தக நகரம் மும்பை, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புத்தாண்டை வரவேற்று வாழ்த்து செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், 2019 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசியல் மற்றும் சமூக தளத்தில், தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் மக்கள் நீதி மய்யம் என்கிற, புதிய அரசியல் கட்சியினையும், மய்யம் என்கிற புதிய சிந்தனையின் மூலம், மிகப்புதிய அரசியல் தெளிவுரையை அறிமுகப்படுத்திய வகையில்,2018 ஆண்டு, நம்மைப் பொறுத்தவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகவே இருந்திருக்கிறது.
மக்கள் நீதி மய்யம், 2018ம் ஆண்டு மாற்றத்திற்கான விதையை விதைத்து இருக்கின்றது. அந்த விதையின் வீரியமிக்க விளைச்சலை, தமிழர்கள் அறுவடை செய்யும் ஆண்டாக 2019 இருக்க வேண்டும். இருக்க வைப்போம்.
இந்த ஆங்கிலேய புத்தாண்டு, புதிய அரசியல், சுதந்திரத்திற்கான களமாகவும், நம் தமிழர்களின் எழுச்சியாகவும், தமிழகத்தின் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வாழ்த்துகிறது என்று கமல் கூறியுள்ளார்.