மேகதாது அணை கட்ட கர்நாடகாவில் வைத்தே எதிர்த்தேன்.. கன்னட மீடியா என்ன கேட்டாங்க தெரியுமா? அண்ணாமலை
சென்னை: மேகதாது அணை கண்டிப்பாக கட்டுவோம் என்று டிகே சிவக்குமார் கூறியது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இருந்து சின்ன சத்தத்தை கூட காணவில்லை என்றும் கர்நாடகாவில் வைத்தே நான் மேகதாது அணைக்கு எதிராக பேசினேன் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் கர்நாடக மாநிலத்திற்கு தேர்தல் இணை பொறுப்பாளராக சென்ற போது கூட மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். பத்திரிகையாளர் சந்திப்பில் கன்னட ஊடகங்கள் என்னிடம் கர்நடகாவில் வந்து இருக்கிறீர்கள், மேகதாது அணை கட்டுவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்கள்?

நான் மேகதாது அணை கட்டுவதை எல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது என்று சொன்னேன். அப்போது... கர்நாடக பிரசாரத்திற்கு எதுக்கு வர்றீங்க என்று கேட்டார்கள்... நான் சொன்னேன்.. நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன். கட்சி வேலையாக இங்கு வந்து இருக்கிறேன். மேகதாது அணை கட்டக் கூடாது என்பது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். நான் இங்கே வந்து மாற்றி பேசப்போவது இல்லை.
நான் அதையே சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன். ஆனால் கர்நாடக தேர்தல் அறிக்கையிலேயே மேகதாது அணை கட்டுவதற்கு முதல் கேபினட் கூட்டத்திலேயே ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டு இருப்பதை நாங்கள் சொன்னோம். அப்படியிருந்தும் நமது முதல்வர் பதவியேற்பு விழா சென்றார். முதல்வருக்கு அங்கு மரியாதை கொடுக்கப்படவில்லை என்பது வேற விஷயம்... டிகே சிவக்குமார் பேசியதன் தமிழாக்கம் சற்று நேரத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறோம்.
மேகதாது அணை கட்டுவதில் பிரச்சினை இருக்கிறது. அதெல்லாம் நமக்கு தெரியும். அதைபற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். மேகாதாது அணை கட்ட வேண்டும். நான் இருக்கிறேன். அதைக் கட்ட வேண்டும்.. கோ அஹெட் என்று அதிகாரிகளிடம் டிகே சிவக்குமார் கூறுகிறார். ஆனால் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு சின்ன சத்ததத்தை கூட காணவில்லை. முதல்வரிடம் இருந்து ஒரு கண்டனத்தை காணோம்.
முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் இப்படித்தான் நடந்தது. அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யட்டும் நமக்கு கூட்டணி முக்கியம் என்று முதல்வர் நினைக்கிறார். ஜப்பானில் இருந்து வந்ததும் மேகதாது அணையை கட்டுவதை உறுதியாக எதிர்ப்போம் என்று சொல்லியிருக்க வேண்டும். இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால் நாங்கள் தடுத்து நிறுத்துவோம். எங்களுக்கு அந்த திறன் இருக்கிறது.
இங்கே இருந்து நடைபயணம் செல்ல வேண்டும் என்றாலும் கூட தமிழக பாஜக அதை செய்யும். முதல்வரும் காங்கிரசும் என்ன செய்யப்போகிறது என்றுதான் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அமைச்சர் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை அமைச்சராக நீடிக்க எந்த ஒரு தகுதியும் இல்லை. பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் சந்திப்பது புதிது அல்ல. ஆளுநர் ஆர்.என்.ரவி கூட தொடர்ந்து சந்தித்து இருக்கிறார்.
ஆனால் இன்று அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு துணை வேந்தர்களை பங்கேற்க போக வேண்டாம் என்று சொல்கிறது. தமிழக அரசு எப்போது திருந்த போகிறது என்று தெரியவில்லை. என்றார். எஸ்.வி சேகர் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் கேட்டதற்கு பதிலளித்த அண்ணாமலை, "டெல்லிக்கு போக சொல்லுங்கள்.. 6 ஆயிரம் ரூபாய் தான் விமான கட்டணம். யாருக்கெல்லாம் புடிக்கலையே அவர்களை எல்லாம் போக சொல்லுங்க. நான் யாருக்கும் எதிரி இல்லை. அனைவரையும் அரவணைத்து செல்லும் நபர் நான். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications