ராஜ்யசபா எம்.பி. ஊதியத்தை கட்சி கணக்கில்தான் வரவு வைக்கப்போகிறேன்.... வைகோ
சென்னை: தமது ராஜ்யசபா எம்.பி. ஊதியத்தை மதிமுக கணக்கில்தான் வரவு வைப்பேன் என தெரிவித்துள்ளார் அக்கட்சிப் பொதுச்செயலாளர் வைகோ.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
நான் வெற்றி தோல்விகளை சமமாகக் கருதுபவன். உயர்வு, தாழ்வுகளைக் கடந்து செல்வதுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொண்டவன். இன்று வந்த செய்தி மகிழ்ச்சி என்றாலும்கூட, இதுவே வேறு விதமாக வந்திருந்தால், அதையும் ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவத்தை, 55 ஆண்டுக்காலப் பொது வாழ்க்கையில் பெற்று இருக்கின்றேன்.
ஏடுகள், ஊடகங்களின் செய்தியாளர்கள் எல்லோரும், நான் நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்குச் செல்ல வேண்டும் என எவ்வளவு விரும்பினார்கள் என்பதை நன்றாக அறிவேன். அரசியல் கட்சிகளைக் கடந்து, சாதி மத எல்லைகளைக் கடந்து, தமிழ் அன்பர்கள், தாய்த் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஏக்கத்தோடு இருப்பவர்கள், இந்த பூமிப்பந்தில் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லையே?
நான் எம்பியாக விரும்பினர்
தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைய வேண்டும்; அது தமிழ் ஈழத் திருநாடாக இருக்க முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு இருப்பவர்கள் அனைவருமே, நான் நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்குச் செல்ல வேண்டும் என விரும்பியதையும் நான் நன்கு அறிவேன்.
நச்சு நிலமாகும் டெல்டா
தமிழகம் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. மேகேதாட்டுவில் கர்நாடகம் புதிய அணை கட்டினால், அதன்பிறகு நமக்கு சொட்டுத் தண்ணீர் வரப்போவது இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டம், காவிரி தீரத்தைப் பாலைவனமாக ஆக்கி விடும். பத்தாயிரம் அடிகள் ஆழத்திற்குத் துளை கிணறுகள் தோண்டி, அதில் 634 வேதியியல் நச்சுப் பொருட்களைக் கலந்து, ஒரு நாளைக்கு 2 கோடி லிட்டர் தண்ணீர் ஒரு கிணற்றுக்குள் செலுத்தப்படும். அது ஒட்டுமொத்தமாக தஞ்சை மண்டலத்தையே நச்சுநிலமாக ஆக்கி விடும். அதன்பிறகு விவசாயிகள், விளைச்சலும் இல்லை, தண்ணீரும் இல்லை என்ற நிலையில் நிலங்களை விற்று விடுவார்கள்.
கூடங்குளத்துக்கு எதிராக முதல் குரல்
பெருமுதலாளிகள், வேதாந்தா உள்ளிட்ட கார்பரேட் நிறுவனங்கள், அந்த நிலங்களை விலைக்கு வாங்கி விடுவார்கள். இந்திய அரசுக்கு 50, 100 ஆண்டுகளுக்கு இலட்சக்கணக்கான கோடி வருமானம் கிடைக்கும். கார்பரேட் கம்பெனிகளுக்குப் பல ஆயிரம் கோடிகள் கிடைக்கும். இந்த ஆபத்தில் இருந்து தமிழகத்தை மீட்பது எப்படி? கூடங்குளத்தில் அணு உலை அமையப்போகிறது என்ற அறிவிப்பு வந்தபோது, அதை எதிர்த்து, 1988 நவம்பர் 21 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் ஒலித்த ஒரே குரல், என்னுடைய குரல்தான். வேறு யாரும் எதிர்க்கவில்லை.
கூடங்குளத்தில் அணுக் கழிவு
அப்போது அன்றைய தலைமை அமைச்சர் ராஜிவ்காந்தி அவர்களும் இருந்தார்கள். இனி கூடங்குளத்தில் அணுக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டப் போகின்றார்கள் என்பது, ஒரு அணுகுண்டைக் கொண்டு வந்து போடுவதற்குச் சமம்.
இந்து இந்து ராஷ்டிரா
மக்கள் ஆட்சிக்கோட்பாட்டின் அடித்தளமாக இருக்கின்ற மதச்சார்பு அற்ற தன்மைக்குப் பேராபத்து ஏற்பட்டு இருக்கின்றது. இந்தி, இந்து, இந்து ராஷ்டிரா என்பதை நிலைநாட்டி விட வேண்டும் என்ற இந்துத்துவ சக்திகளின் பிரதிநிதியாக, நரேந்திர மோடி அவர்களின் அரசு தீவிரமான முயற்சிகளின் ஈடுபட்டு வருகின்றது. சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைப்பதற்காக, முற்பட்ட வகுப்பினருள் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக புதிய சட்டத்தை இயற்றி இருக்கின்றார்கள். இதுவரை இல்லாத ஆபத்து.
மதிமுகவுக்கே ஊதியம்
எந்தப் பதவியையும் எதிர்பார்த்து நான் இல்லை. ஒரு கோவிலாக, மசூதியாக, தேவாலயமாக, அதை எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக இந்தக் கட்சியை, இந்தத் தாயகத்தைக் கருதுகின்றேன். இன்றைக்குச் சொல்லுகிறேன்: நான் வாங்குகின்ற மாத ஊதியத்தை முழுமையும் கட்சிக்கணக்கில்தான் வரவு வைக்கப் போகின்றேன். என்னுடைய உடல் நலம் எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றதோ, அந்த அளவுக்கு இந்தக் கட்சிக்காக உழைப்பேன். இவ்வாறு வைகோ பேசினார்.