சுப்ரியா சாஹு ஐஏஎஸ்க்கு ஐ.நா விருது.. “தமிழ்நாடு பெருமை கொள்கிறது” - முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ்., ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய சுற்றுச்சூழல் விருதான 'சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்' விருதினைப் பெற்றுள்ளார். இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற்ற அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயற்கைப் பாதுகாப்புப் பணிகளில் சுப்ரியா சாஹு காட்டிய அயராத அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலையைக் குறைப்பதற்கான வழிமுறைகள், வனப்பரப்பு விரிவாக்கம், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், 'மீண்டும் மஞ்சப்பை' போன்ற விழிப்புணர்வுப் பிரசாரங்கள் ஆகியவை இவரது முக்கியப் பங்களிப்புகளாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் இங்கர் ஆண்டர்சன், சுப்ரியா சாஹுவின் பணிகளைப் பாராட்டிப் பேசுகையில், "பூமி வெப்பமடைந்து வரும் சூழலில், நகரங்கள் வேகமாக வெப்பமடைகின்றன. இந்த கான்கிரீட் காடுகளுக்குள், சுப்ரியா சாஹு இயற்கையின் குளிர்ச்சியை கொண்டு வந்து, மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவியுள்ளார்" எனத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுப்ரியா சாஹுவின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு முயற்சிகள் மூலம் 25 லட்சம் பசுமை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வனப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டு, 12 மில்லியன் மக்களுக்கு பயனளித்து, காலநிலை மீள்தன்மைக்கு ஒரு முன்மாதிரியை அவர் அமைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக 127 பேருக்கு ஐ.நா. சபை 'சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்' விருதை வழங்கி கவுரவித்துள்ளது. நடப்பாண்டில் உலக அளவில் ஐந்து பேருக்கு இந்த விருது வழங்கப்பட்ட நிலையில், அதில் தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரியா சாஹுவும் ஒருவராக உள்ளார்.
ஐ.நா.வின் உயரிய விருதைப் பெற்ற சுப்ரியா சாஹுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உலக அளவில் காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிறப்பான இடத்தைப் பெற அவர் ஆற்றிய உழைப்பைப் பாராட்டிய முதலமைச்சர், "சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது!" எனக் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் (X) தளத்தில், "சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது! காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் அமைப்பின் 'சாம்பியன்ஸ் ஆப் எர்த்' விருதினை வென்றுள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் & வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு எனது பாராட்டுகள்!
ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications