பராசக்தி! "எங்களை நீக்கிவிட்டு வேறொருவர் வந்து உட்கார்ந்தாலும்" அண்ணாவின் முழு பேச்சு இதோ!
சென்னை: "எங்களை நீக்கிவிட்டு வேறொருவர் வந்து உட்கார்ந்தாலும்" என தொடங்கும் அண்ணாவின் கூற்று, பராசக்தி படத்தில் இருந்து தணிக்கை குழுவினரால் நீக்கப்பட்டுள்ளது.
அது போல் "இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்ற பொருள்" என்ற வசனமும் நீக்கப்பட்டுள்ளது. அது போல் இந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள், காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலா உள்ளிட்டோர் நடித்த படம் பராசக்தி! இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நிகழ்ந்தது.
படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு நாளை ரிலீஸ் செய்வதாக சொல்லப்பட்டது. இதனிடையே தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. பின்னர் தணிக்கை குழு சொன்ன திருத்தங்களை படக் குழுவினர் மேற்கொள்ள ஒப்புக் கொண்டதை அடுத்து பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பராசக்தி படத்தில் 25 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் அறிஞர் அண்ணாவின் புத்தகமான "தீ பரவட்டும்" என்ற வார்த்தை நீக்கப்பட்டு நீதி பரவட்டும் என மாற்றப்பட்டுள்ளது.
அது போல் அறிஞர் அண்ணாவின் வாசகங்களான "எங்களை நீக்கிவிட்டு வேறொருவர் வந்து உட்கார்ந்தாலும்", "இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்ற பொருள்" ஆகியவை படத்தில் இருந்து நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டது.
அது போல் இந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள், காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. இந்தி திணிப்புக்கு எதிரான வரலாற்றை பேசும் படத்தில் இந்திக்கு எதிரான வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட இரு வாக்கியங்களை அண்ணா எப்போது சொன்னார் என்பது குறித்து பார்க்கலாம். 1968 ஆம் ஆண்டு அண்ணா பேசுகையில் "ஓராண்டுக்கு முன்னால், நான் பதவிக்கு வந்தேன்.
இந்த ஓராண்டில் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன்.
1. சுயமரியாதை திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம்
2. தாய்த் திருநாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்
3. தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை. தாய்மொழி மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அறிவிப்பு
இதைப் பார்த்துவிட்டுப் பலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
இவர்களை விட்டு வைக்கலாமா? ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
முடியுமா என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், கலைத்து விட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டு வந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, தமிழ்நாட்டு மக்கள் வெகுண்டெழுவார்களே என்ற அச்சமும் கூடவே வரும்.
அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்.
என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன். இனி இவர்கள் (டெல்லி - மத்திய அரசு) தன்னாலானதை செய்யட்டும்.
-பேரறிஞர் அண்ணா.
இவர் பேசியதில் இருந்து இடம் பெற்றிருந்த வசனங்கள்தான் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அது போல் அவரது புத்தகமான தீ பரவட்டும் என்ற வசனமும் நீதி பரவட்டும் என மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications