சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்?
சென்னை: சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் முழங்கினார். இந்நிலையில் தான்,''சனாதன தர்மம் என்பது வாழ்க்கை முறை. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும். அடுததவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படக்கூடாது என்பதும் சனாதன தர்மத்தில் ஒன்றாக உள்ளது. வயதான காலத்தில் அப்பா - அம்மாவை கடவுள்போல் பார்த்து கொள்ள வேண்டும் என சனாதன தர்மம் சொல்கிறது. சனாதன தர்மம் இருக்க கூடாது என்றால் அப்பா -அம்மாவை வெளியே துரத்திவிட வேண்டும். முடியுமா?'' என்று நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.
நடிகர் அர்ஜுன் நடித்துள்ள திரைப்படம் 'ப்ளாஸ்ட்'. இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நடிகை அபிராமி உள்பட பலர் நடித்துள்ள நிலையில் சுபாஷ் கே ராஜ் இயக்கி உள்ளார்.

இந்நிலையில் தான் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களுக்கான காட்சி திரையிடப்பட்டது. அதன்பிறகு படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது நடிகர் அர்ஜுனிடம் சனாதன தர்மம் பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக பத்திரிகையாளர், ''சனாதனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் சார்? இந்த நிகழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாத கேள்வியாக இருந்தாலும் கூட உங்களுக்கு சம்பந்தமான கேள்வி தான் இது. நீங்கள் ஆக்ஷனிலும் கிங், ஆன்மிகத்திலும் கிங். நீங்கள் கோவில் எல்லாம் கட்டி உள்ளீர்கள்'' என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அர்ஜுன், ''எனக்கு தெரிந்த அளவுக்கு சொல்ல வேண்டும் என்றால் சனாதனம் என்பது வாழ்க்கை முறை. எப்படி நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும். தப்பு செய்யக்கூடாது. திருடக்கூடாது. அடுத்தவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படக்கூடாது என்பதும் சனாதன தர்மத்தில் ஒன்று.
நாம் குழந்தைகளாக இருக்கும்போது நம்மை தாய், தகப்பன் எப்படி அன்பாக பார்த்து கொண்டார்கள். வயதான காலத்தில் அவர்களையும் நம்மை பார்த்து கொண்டது போல் பார்த்து கொள்ள வேண்டும். கடவுள் போல் பார்த்து கொள்ள வேண்டும். அதையும் சனாதன தர்மம் சொல்கிறது. அதனால் சனாதன தர்மம் இருக்க கூடாது என்றால் அப்பா - அம்மாவை வெளியே துரத்திவிட வேண்டும். முடியுமா?. சனாதன தர்மம் என்பது மதம் கிடையாது. அது ஒரு வாழ்க்கை முறை. அதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சனாதன தர்மம் பற்றி நான் புரிந்து கொண்டதை சொல்கிறேன். அதனை அனைவரும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்'' என்றார்.
தமிழகத்தில் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் அடிக்கடி சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது டெங்கு, மலேரியா, கொரோனா போல் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என கூறினார். உதயநிதி ஸ்டாலின் மீது பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதன்பிறகு தேர்தலில் தோல்வியடைந்து உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரானார்.
அதன்பிறகு கூடிய முதல் சட்டசபை கூட்டத்தொடரில் பேசும்போதே சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று முழங்கினார். இது சர்ச்சையை கிளப்பியது. இதனால் அர்ஜுன் அவரை மனதில் வைத்து இந்த பதில் சொன்னாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications