விஜயகாந்தை முதல்வராக்க உழைக்கிறோம்… சண்முக பாண்டியன் சொல்கிறார்
சென்னை: திமுகவில் உதயநிதி ஸ்டாலின் வாக்கு கேட்டால் குடும்ப அரசியல் இல்லை, எங்கள் கட்சிக்கு நாங்கள் வாக்கு கேட்டால் குடும்ப அரசியலா? என்று சண்முகபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது மகனும், நடிகருமான சண்முக பாண்டியன், இன்று தன்னுடைய பிறந்த நாளை தே.மு.தி.க. தொண்டர்களுடன் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் கட்சிக்கு நாங்கள் தான் ஓட்டு கேட்க முடியும், அதனை விட்டுவிட்டு காங்கிரஸ், திமுகவுக்கு ஓட்டு கேட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

நாங்கள் குடும்ப அரசியல் செய்கிறோம் என்றால், திமுகவில் மு.க. ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளனர் என்று பதிலளித்தார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், தமிழகம் முன்னேற வேண்டும், அப்பாவை (விஜயகாந்த்) முதல்வராக்க வேண்டும் என்பதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.
கட்சியில் அண்ணனுக்கு எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை என்றும், அவர் கட்சிக்காக உழைத்து கொண்டிருப்பதாகவும் கூறினார். அதேநேரம், நீண்ட காலம் கட்சிக்காக உழைத்த அம்மாவுக்கு ( பிரேமலதா) தற்போது தான் பதவி கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
விரைவில், அப்பா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்றும் அதனை அனைவரும் பார்ப்பீர்கள் என்றும் சண்முக பாண்டியன் தெரிவித்தார். இதற்கிடையே, தீவிர அரசியலில் இறங்கி உள்ள விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications