தங்க நகை பையை கண் முன்னே வைத்து தூங்கிய பெண்..கனநிமிடத்தில் வந்த களவாணி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு பகுதியில் தங்க நகை பையை முன் இருக்கையில் வைத்து விட்டு பின் இருக்கையில் பெண் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வந்த மர்ம நபர் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, அந்த நகை பையை அப்படியே எடுத்து சென்றார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், விருதுநகரை சேர்ந்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகையை பை ஒன்றில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அந்த ஒரு பெண் கட்டத்தில் தங்க நகை பையை முன் இருக்கையில் வைத்துவிட்டு பின் இருக்கையில் தூங்கினார்.

இதை கவனித்த மர்ம நபர். அக்கம் பக்கம் யாரும் தன்னை பார்க்கிறார்களா எனறு பார்த்துவிட்டு, அப்படியே சில நொடிகளில் தங்க நகைபையை எடுத்துக் கொண்டு எதுவுமே நடக்காததுபோல் மெதுவாக அங்கிருந்து நடந்து கடந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்த அந்த பெண் தங்க நகை வைத்த பையை காணாது திடுக்கிட்டார்.
இதையடுத்து உடனே ஜார்க்கண்டை சேர்ந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சென்ட்ரல் ரயில்நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அவர் எந்த ரயிலில் ஏறினார். அவர் யார் என்பதை தேடினார்கள். அந்த நபர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தாஸ் என்பதை கண்டுபிடித்த போலீசார், நகையை பறிமுதல் செய்ததுடன், தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நகை என்றால், எழும்பூர் ரயில் நிலையத்தில் பணத்தை திருடி உள்ளார் மர்ம நபர்.. திருவாரூரில் இருந்து சென்னை எழும்பூர் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கிகொண்டிருந்த நபரிடம் ரூ.2 லட்சம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 48 வயதாகும் வினோத் கண்ணா, கடந்த மே 28-ந்தேதி திருவாரூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார். இதற்கிடையே, ரயில் சேத்துப்பட்டு அருகே வந்து கொண்டிருந்தபோது வினோத் தூங்கிவிட்டாராம். பின்னர், எழும்பூர் ரயில் நிலையம் வந்ததும் ரயிலில் இருந்து இறங்காமல் தூங்கியுள்ளார். அதனை கவனித்த இளைஞர் ஒருவர், வினோத் வைத்திருந்த பையை திருடிச்சென்றுவிட்டார்.
பின்னர், கண் விழித்து பார்த்தபோது தான் வைத்திருந்த பை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் பயணம் செய்த ரயில் பெட்டி முழுவதும் தேடி பார்த்தும் பையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி எழும்பூர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரில், காணாமல் போன பையில் ரூ.2 லட்சம் பணம் மற்றும் துணிகள் இருந்ததாக கூறியிருந்தார். இதுகுறித்து, ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் எழும்பூர் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிவதை ரயில்வே போலீசார் கண்டனர். பின்னர், அவரை பிடித்து விசாரித்தபோது மாற்றி மாற்றி பேசினார். இதையடுத்து சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், திருச்சி மாவட்டம், காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த அரிகரண் (27) என்பதும், வினோத் கண்ணாவின் பையை திருடியதும் தெரியவந்தது. பின்னர், அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம், 5 பவுன் நகை மற்றம் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அரிகரண் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications