பேனரிலேயே மாஸ் காட்டும் விஜய்.. தவெக மாநாட்டு பந்தலில் குவிந்த போலீஸ் தலைகள்! கட்சியினருக்கு ஷாக்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி சாலை பகுதியில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 90% நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் மாநாட்டுக்கு சிக்கல் ஏற்படும் விதமாக தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டுமென வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு சிக்கல்கள், தடங்கல்களை கடந்து அவரது கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி சாலைப் பகுதியில் வரும் 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுக்காக சுமார் 150 ஏக்கர் பரப்பளவு உள்ள இடம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

நான்கு பார்க்கிங், 85 ஏக்கரில் மாநாட்டு திடல், 100 அடி கொடுக்கம்பம் என ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பூமி பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது மாநாட்டுப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து இருக்கிறது.
தவெக மாநாட்டுக்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க தனித்தனியாக பல்வேறு நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உணவு, குடிநீர், கழிப்பிடம், மருத்துவம், பாதுகாப்பு, சிசிடிவி என அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 10,000 மேற்பட்ட பணியாளர்களும், தன்னார்வலர்களும் இந்த பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக சுமார் 25 குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்களும் தனி தனியாக செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்புகளை விஜய் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் மாநாட்டு ஏற்பாடுகள் இறுதித் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் தற்போது மாநாட்டு திடலில் இடம்பெற்றுள்ள விஜயின் கட் அவுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாநாட்டு நுழைவாயில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டு இருக்கிறது. மாநாட்டில் நுழைவாயில் பகுதியில் இரண்டு யானைகள் கால்களை உயர்த்தி சொல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதோடு அதற்கு நடுவில் வெற்றி கொள்கை திருவிழா என்ற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக மாநாட்டு திடலில் கல்விக் கண் திறந்த காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிரம்மாண்ட கட்டு அவுட்டுகளுக்கு நடுவே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் இடம் பெற்று இருக்கிறார். இது மட்டும் அல்லாமல் வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், தமிழன்னை, சேரர் சோழர், பாண்டியர் ஆகியோர்களின் கட்ட அவுட்களும் வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற பெரும் தலைவர்களின் கட் அவுட் விஜயின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் மட்டும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாநாட்டுக்கு செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தினர் ஏராளமான பிளக்ஸ் பேனர்களை அமைத்திருக்கின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பிக்கள் மாநாட்டு பந்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் தவெகவினர் வைத்து இருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏராளமானோர் உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் அமைத்திருக்கும் நிலையில் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் இருப்பதால் பேனர்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியினர் பேனர்களை அகற்றாவிட்டால் காவல் துறையினரை பேனர்களை அகற்றும் பணியில் இறங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவும் நிலையில், கட்சியினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications