“உங்களை போல் தான் நானும்..” ஜனநாயக கடமை ஆற்றினார் ராஜ்யசபா எம்.பி இசைஞானி இளையராஜா!
சென்னை: லோக்சபா தேர்தலில் வாக்கு பதிவு செய்து ஜனநாயகக் கடமை ஆற்றினார் ராஜ்யசபா எம்.பி இசைஞானி இளையராஜா.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இசைஞானி இளையராஜா, சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். ராஜ்யசபா நியமன எம்.பியாக இருக்கும் இளையராஜா காலையிலேயே வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.
வாக்களித்த பின்னர் இசைஞானி இளையராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய "நாம் எல்லோரும் இந்தியக் குடிமக்கள். நமக்கு இருக்கும் உரிமை வாக்குரிமை. நீங்கள் வாக்களிப்பது போல் நானும் வாக்களித்தேன்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications