இளையராஜா மகள்.. பாடகி பவதாரிணி இலங்கையில் காலமானார்!
சென்னை: இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இசைஞானி இளையராஜவின் மகள் பவதாரிணி. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றார். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்த பவதாரிணி, சிகிச்சை பலனிளிக்காமல் இன்று மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். பவதாரிணிக்கு வயது 47. பவதாரிணியின் உடல் நாளை சென்னைக்கு கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.

பிரபலமான பாடகியாகவும் திரைத்துறையில் பவதாரிணி வலம் வந்தார். இளையராஜா இசையமைத்த ராசய்யா படத்தில் முதன் முதலாக பாடல் பாடினார். பாரதி பாடத்தில் மயில் போல பொண்ணு என்ற பாடலை பாடியதற்காக பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது. இதேபோல் நடிகர் விஜயின் காதலுக்கு மரியாதை, ப்ரண்ட்ஸ் படத்தில் பாடல்களை பாடியுள்ளார். காதலுக்கு மரியாதை படத்தில் இது சங்கீத திருநாளோ என்ற பாடலை பாடியுள்ளார்.
காற்றில் வரும் கீதமே, ஒளியிலே தெரிவது தேவதையா போன்ற பாடல்களையும் பவதாரிணி பாடியுள்ளார். இராமன் அப்துல்லா படத்தில் என் வீட்டுச் சன்னல் என்ற பாடலையும் தாமிரபரணி படத்தில் தாலியே தேவை இல்லை உள்ளிட்ட பல பாடல்களை பவதாரிணி பாடியுள்ளார். தாமிரபரணி படத்தில் பாடிய தாலியே தேவை இல்லை என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. பின்னணி பாடகியாக மட்டும் இன்றி 10 க்கும் மேற்பட்ட படங்களில் பவதாரிணி இசைமையத்துள்ளர்.

தனது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இசையிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி உயிரிழந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல், பவதாரிணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மகள் மறைந்த செய்தி அறிந்து திரைத்துறையினரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications