சென்னை கோயம்பேடு விஆர் மாலில் அனுமதியின்றி மதுவிருந்து.. ஆட்டம், பாட்டம் என களைகட்டிய பார்ட்டி
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள விஆர் மாலில் போலீஸார் அனுமதியின்றி மதுவிருந்து நிகழ்ச்சி நடந்ததை அடுத்து 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் கோயம்பேட்டில் உள்ளது விஆர் மால். இந்த வணிக வளாகத்தில் உணவு கடைகள், துணி கடைகள், நகைக் கடைகள், தியேட்டர்கள் என சகலமும் இருக்கிறது.
இந்த நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நிறைய மக்கள் கூடுவர். அந்த இடமே கூட்ட நெரிசலாக இருக்கும்.
சென்னை வி ஆர் மாலில் மது விருந்து நிகழ்ச்சியில் மயங்கிய இளைஞர் மருத்துவமனையில் பலி
மதுவிருந்து
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றைய தினம் மதுவிருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். DJ Mandragora live in namma chennai எனும் டிஜே நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த மது விருந்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நிகழ்ச்சியே களைகட்டியது. குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் இளைஞர்கள் கூச்சலிட்டனர்.
போலீஸாருக்கு மதுவிருந்து தொடர்பாக புகார்
இந்த நிலையில் இந்த மது விருந்து தொடர்பாக அண்ணாநகர் கலால் துறை போலீஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மது விருந்து நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கப்பட்டதற்கான ஆதாரத்தை கேட்டனர். பின்னர்தான் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கவில்லை என தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த இளைஞர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினர். மேலும் 844 விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.
4 பேர் மீது வழக்குப் பதிவு
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மது அருந்திவிட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து அனுமதியின்றி நிகழ்ச்சி ஏற்பாடு செய்த விக்னேஷ் சின்னதுரை, மார்க் பாரத், பார் மேனேஜர் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஈசிஆர் ரிசார்ட்
சென்னையில் ஈசிஆர் சாலைகளில் உள்ள ரிசார்ட்களில் பார்ட்டிகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவற்றை போலீஸார் ரெய்டு நடத்தி வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் ஒரு மாலில் அனுமதியின்றி மது விருந்து நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.