சென்னையில் முன்னாள் எம்எல்ஏவுக்கு விற்கப்பட்ட வனத்துறை நிலம்.. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை திருமுல்லைவாயலில் வனத்துறைக்கு சொந்தமான நிலம் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரனுக்கு விற்பனை செய்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வக்கீல் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமுல்லைவாயலைச் சேர்ந்த டி.எச்.ராஜ்மோகன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "சென்னையை அடுத்து உள்ள திருமுல்லைவாயலில் வனத்துறைக்கு சொந்தமான 40.95 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை இம்பீரியல் கெமிக்கல் நிறுவனத்துக்கு 1942-ம் ஆண்டு நிபந்தனைகளுடன் குத்தகைக்கு வழங்கப்பட்டது.

பின்னர், இந்த நிறுவனத்தின் பெயர் கிரசன்ட் டைஸ் அண்டு கெமிக்கல் என்று 1983-ம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து நிபந்தனையை மீறியதாக இந்த நிறுவனத்துக்கு அன்றைய காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் 1984-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அந்த நோட்டீஸில், " தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் பெயர் மாற்றப்பட்டுள்ளது.எனவே இந்த நிலத்தை இந்தியன் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றியதற்காகவும் குத்தகையை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதன் பின்னர், குத்தகையை ரத்து செய்து நிலத்தை மீட்கவேண்டும் என்று நில அளவை ஆணையர் 1986-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையில், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் தன் அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி வனத்துறைக்கு சொந்தமான இந்த நிலத்தை வருவாய்த்துறை நிலமாக மாற்றி, அதன் பின்னர், அந்த நிலத்தை அந்த கம்பெனி நிலமாக மாற்றியிருக்கிறார்.
பின்னர், அந்த நிலத்தில் ஒருபகுதியை அந்த நிறுவனத்திடம் இருந்து தன் பெயருக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார். எனவே, இந்த நிலத்தை மீட்டு, மீண்டும் வனத்துறை நிலமாக மாற்றும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" இவ்வாறு டி.எச்.ராஜ்மோகன் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 1942-ம் ஆண்டு குத்தகைக்கு விடப்பட்ட நிலம் குறித்து இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் எப்படி வழக்கு தொடர முடியும்? என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் பதில் அளிக்கையில், இந்த தகவல்கள் எல்லாம் இப்போது தான் தெரிய வந்தது. அதனால், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம் என்று விளக்கம் தந்தார். இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலம் எப்படி தனி நபருக்கு விற்கப்பட்டது? என்று தமிழக அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு பிளீடர் ஏ.எட்வின் பிரபாகர், இதுகுறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அமர்வு, இந்த நிலம் குறித்து விசாரிக்க வக்கீல் ஆணையரை நியமிக்கிறோம். அவரது பெயர் பின்னர் அறிவிக்கப்படும். அவர் நேரில் சென்று நிலம் குறித்து ஆய்வு செய்து, புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும்" என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications