ஹாலில் ஏசி போடச் சொல்கிறேன்.. கோவிச்சுக்காம அங்க போங்க.. செந்தில்பாலாஜியை நிற்க விடாத அன்பகம் கலை!
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு விருப்பமனு கொடுக்க வந்த அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், கட்சியின் துணை அமைப்புச் செயலாளரான அன்பகம் கலை அந்தப் பக்கம் போய் அமருங்க, இங்கே நிற்காதீங்க என கறாராக கூறிய நிகழ்வு நடந்துள்ளது.
அந்த ஹாலில் ஏசி போட்டுவிடச் சொல்கிறேன், கொஞ்சம் கோபித்துக் கொள்ளாமல் அங்கே சென்று அமருமாறு அன்பகம் கலை கூறியவுடன் மறுப்பு ஏதும் சொல்லாமல் நடையை கட்டினார் செந்தில்பாலாஜி.
அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் ஒரு பெரும் படையே திரண்டு நின்றதால் அது மற்றவர்களுக்கு சிரமத்தை கொடுக்கும் என்ற நோக்கத்தில் அவரை அங்கிருந்து நகர்ந்து செல்லுமாறு அறிவுறுத்தினார் அன்பகம் கலை.

திமுக உட்கட்சித் தேர்தல்
திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒன் இந்தியா தமிழில் நாம் ஏற்கனவே கூறியிருந்ததை போல் கட்சியினர் வருகையால் அண்ணா அறிவாலயம் திருவிழா கோலம் பூண்டு காணப்படுகிறது. இதனிடையே கரூர் மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு விருப்பமனு கொடுப்பதற்காக காலை சீக்கிரமாகவே அறிவாலயம் வந்துவிட்ட செந்தில்பாலாஜி, நன்னியூர் ராஜேந்திரன் உட்பட இன்னும் சில முக்கிய நிர்வாகிகளுக்காக காத்திருந்தார்.

செந்தில்பாலாஜியுடன் செல்ஃபி
அவருடன் கரூர் மாவட்டத்திலிருந்து ஒரு பெரும் படையே வந்திருந்தது. போதாகுறைக்கு கோவை மாவட்ட நிர்வாகிகள் வேறு செந்தில்பாலாஜியை சுற்றி பெருமளவில் திரண்டனர். விருப்பமனு வாங்கப்படும் மேஜைக்கு அருகே செந்தில் பாலாஜி நின்று கொண்டிருந்ததால் மற்ற மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கூட்ட நெரிசல் காரணமாக சிரமப்பட்டனர். இதனிடையே இடம் பொருள் அறியாமல் செந்தில்பாலாஜியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வந்தனர் அவரது ஆதரவாளர்கள்.

அன்பகம் கலை
இதனை பொறுத்து பொறுத்து பார்த்த திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, அவரை கூப்பிடுங்க என ஒருவர் மூலம் செந்தில்பாலாஜியை அழைத்தார். அந்த ஹாலில் ஏசி போட்டுவிடச் சொல்கிறேன், கொஞ்சம் கோபித்துக் கொள்ளாமல் அங்கே சென்று அமருங்கள், எனத் தெரிவித்தார். அன்பகம் கலை இவ்வாறு கூறியவுடன் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடனடியாக அங்கிருந்து நகர்ந்து கூட்ட நெரிசலை சீர்படுத்தினார்.

ஆ.ராசா கிண்டல்
இதனிடையே பாலாஜி வந்தால் படையே வந்த மாதிரி என ஆ.ராசா அவரிடம் கிண்டல் செய்த நிகழ்வால் அங்கு கலகலப்பான சூழல் உருவானது. பிறகு தாம் எதிர்பார்த்து காத்திருந்த நிர்வாகிகள் வந்த பிறகு தனது விருப்பமனுவை தலைமைக்கழகத்தில் வழங்கிவிட்டு புறப்பட்டார் செந்தில்பாலாஜி.












Click it and Unblock the Notifications