சென்னை சிஆர்பிஎப் பயிற்சி மையத்தில் பரபரப்பு! குறி தவறிய குண்டு.. வீட்டு மேற்கூரையை துளைத்தது!
சென்னை: சென்னை ஆவடி பயிற்சி மையத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் இன்று துப்பாக்கிச்சூடும் பயிற்சி மேற்கொண்டபோது குறி தவறிய குண்டு அருகே உள்ள வீட்டின் மேற்கூரையில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஆவடியில் சிஆர்பிஎப் பயிற்சி மையம் உள்ளது. இங்கு சிஆர்பிஎப் படைப்பிரிவில் உள்ள வீரர்களுக்கு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
இங்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வீரர்களுக்கு துப்பாக்கிச்சூடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஏராளமான வீரர்கள் பயிற்சி பெற்று பல இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றும் வழக்கம்போல் சென்னை ஆவடி மையத்தில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு பயிற்சி துவங்கியது. வீரர்களில் ஒரு பகுதியினர் துப்பாக்கிச்சூடும் பயிற்சியில் ஈடுபட்டனர். இலக்குகளை நோக்கி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது வீரர் ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு எதிர்பாராதவிதமாக இலக்கை விட்டு விலகியது.
இதனால் இந்த குண்டு பயிற்சி மையத்தை தாண்டி அருகே உள்ள வீட்டின் மேற்கூரையை துளைத்து வீட்டுக்குள் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications