அடுத்த வாரம் தொடங்கும் சட்டசபை தேர்தல்... 19 நாட்களாக உயராத பெட்ரோல் டீசல் விலை
சென்னை: ஐந்து மாநில தேர்தல்கள் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் கடந்த 19 நாட்களாக எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தாண்டியது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 93.11 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு லிட்டர் டீசல் 86.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் 91.17 ரூபாய்க்கும் டீசல் 81.47 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல மும்பையில் பெட்ரோல் 97.57 ரூபாய்க்கும், டீசல் 88.60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அடுத்த வாரம் வாக்குப்பதிவு நடைபெறும் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 91.35 ரூபாய் மற்றும் 84.35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த மாதம் பெரும்பாலான நாட்கள் தொடர்ந்து உயர்ந்த வந்த பெட்ரோல், டீசல் விலை ஐந்து மாநில தேர்தல் குறித்த அறிவிப்பிற்குப் பின் உயர்த்தப்படவில்லை. அடுத்த மாதம் மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 30 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் இன்று கச்சா எண்ணெய் ஒரு பேரல் 64 டாலருக்கு வர்த்தகம் ஆகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுகட்டும் விதமாக ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications