எ.வ.வேலு வீட்டில் நீடிக்கும் வருமான வரி சோதனை.. கட்டுக்கட்டாக சிக்கும் பணம்.. கணக்கு சொல்வாரா?
சென்னை: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள சோதனை மேற்கொண்டுள்ளனர். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் இருந்து கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 40 இடங்களிலும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது.
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர் எ.வ. வேலு. இவருக்கு சொந்தமாக பல்வேறு மருத்துவக் கல்லூரிகளும், நிறுவனங்களும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. அவரது சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு அண்மையில் புகார்கள் சென்றன. இதன்பேரில், கடந்த 2ஆம் தேதி முதல் எ.வ. வேலுவுக்கு சொந்தமான கல்லூரிகள், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் என 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அமைச்சர் வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5வது நாளாக சோதனை செய்து வரும் நிலையில், இதுவரை அவரிடம் இருந்து ரூ.18 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தவும் வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் காசா கிராண்ட் நிறுவனம், அப்பாசாமி ரியல் எஸ்டேட் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். காசா கிராண்ட் நிறுவனம் ரூ.700 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.4 கோடியும், அப்பாசாமி ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து ரூ.250 கோடி மதிப்புள்ள விற்பனை ரசீதுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், எ.வ. வேலுவின் நண்பர்கள், உறவினர்கள், அவர்களின் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் 5வது நாளாக இன்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்த ஆவணங்களின் அடிப்படையில் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் பலரிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் ஐடி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications