சசிகுமார் உறவினர் தற்கொலை.. கந்துவட்டி.. திடீரென குறி வைக்கப்பட்ட அன்புச்செழியன்.. என்ன நடக்கிறது?
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கி இருக்கும் பைனான்சியர் அன்புச் செழியன் ஏற்கனவே பலமுறை கந்து வட்டி புகாரில் வசமாக சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கி இருக்கும் பைனான்சியர் அன்புச் செழியன் ஏற்கனவே பலமுறை கந்து வட்டி புகாரில் வசமாக சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திடீர் என்று அவர் வீட்டில் நடக்கும் சோதனைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
கடந்த 2017ம் வருடம் நவம்பர் மாதம் பிரபல இயக்குனர் சசிகுமாரின் மைதுனரான அசோக் என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்த தற்கொலை தமிழ் சினிமா துறையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
நல்ல சொத்து வைத்து இருந்த அசோக் போன்ற நபர் தற்கொலை செய்து கொள்கிறார். அதிலும் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார் என்பது எவ்வளவு பெரிய கொடுமை. அதிலும் இந்த தற்கொலை வட்டி கொடுமை காரணமாக நிகழ்ந்தது.

தற்கொலை எப்படி
இந்த தற்கொலை சம்பவம் அபிராமபுரத்தில் இருக்கும் அசோக் வீட்டில் நடந்தது. வட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இவர் கோபுரம் பிலிம் நிறுவனத்தை சேர்ந்த அன்புச் செழியன் என்பவர்தான் தன் தற்கொலைக்கு காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்காக அவர் நேரடியாக கடிதமும் எழுதி வைத்து இருந்தார். இவரின் தற்கொலை கடிதம் கோலிவுட்டை பெரிய அளவில் உலுக்கியது.

யார் காரணம்
தனது தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் என்று பைனான்சியர் மதுரை அன்புச் செழியனைக் குறிப்பிட்டார். அவரது சித்திரவதை தாங்காமல்தான், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டதாக தெளிவாகக் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார். என்னை அவர் மிரட்டினார். என் குடும்பத்திற்கு பிரச்சனை செய்வேன் என்று மிரட்டினார். இதை தாங்க முடியவில்லை. அதனால் தற்கொலை செய்கிறேன் என்று அசோக் குறிப்பிட்டு இருந்தார்.

என்ன மறுப்பு
தற்போது கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் அவரது தற்கொலை கடிதத்திற்கு மறுப்பாக ஒரு கடிதம் எழுதி இருந்தது . அதில் தற்கொலை செய்து கொண்ட அசோக் குமாருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோபுரம் பிலிம்ஸ் விளக்கம் அளித்து இருந்தது. ஆனால் அன்புச் செழியன் மீது அப்போதே கோலிவுட்டில் பலர் வட்டி கொடுமை புகார் அளித்தனர். அன்புச் செழியன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அப்போதே தெரிவித்து இருந்தார்.

ஆனால் அணைந்து போனது
ஆனால் அன்புச் செழியனுக்கு பெரிய அளவில் அரசியல் ஆதரவு இருந்தது. சினிமா துறையில் ஒரு சிலர் அவர் மீது புகார் வைத்தாலும், இன்னொரு பக்கம் பலர் அவருக்கு ஆதரவு அளித்தனர். அன்புச் செழியன் எங்களுக்கு நிறைய உதவி இருக்கிறார் அவரை கைது செய்ய கூடாது என்று சிலர் கூறினார்கள். சசிகுமார் உறவினர் தற்கொலையில் கடைசியில் எந்த விதமான நீதியும் கிடைக்கவில்லை. அன்புச் செழியன் மீதும் பெரிய அளவில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் என்ன
அதன்பின் இத்தனை நாட்கள் கழித்து இப்போது மீண்டும் வருமான வரித்துறை மூலம் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார் அன்புச் செழியன்.பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அன்புச்செழியனின் வீடுகளில் இன்னும் சோதனை முடியவில்லை. இன்று காலையும் மீண்டும் சோதனை தொடங்கி நடந்து வருகிறது. அவருக்கு சென்னை மற்றும் மதுரையில் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் இருக்கிறது. இரண்டு நகரங்களிலும் 22 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

முன்பு கைது
இதற்கு முன்பே கந்து வட்டி புகாரின் பேரில் அன்பு செழியனை கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை மாவட்ட எஸ்.பி அஸ்ரா கார்க் கைது செய்தார். சுந்தரா டிராவல்ஸ், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்த தங்கராஜ் என்பவர் கொடுத்த புகாரில் இவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல புகார்கள் இருந்தாலும் அரசியல் பலத்தால் பாதுகாப்பாக வலம் வந்தார். தங்கராஜ் புகாரில் அவர் உடனே வெளியே வந்தார். இப்படிப்பட்டவர்தான் தற்போது குறி வைக்கப்பட்டுள்ளார்.

என்ன காரணம்
இத்தனை நாட்கள் சுதந்திரமாக இருந்த அன்புச் செழியன் இப்போது குறி வைக்கப்பட காரணம் ஏதாவது இருக்கலாம் என்கிறார்கள். அன்புச் செழியன் வேறு எங்கேயோ சிக்கி இருக்கிறார்.இதற்கு பின் பெரிய விஷயங்கள் இருக்கலாம். அதனால்தான் நிறைய அரசியல் தொடர்பு நட்புகள் இருந்தும் அன்புச் செழியன் இப்போது குறி வைக்கப்படுகிறார். தற்கொலை விஷயத்தையே எளிதாக கடந்தவருக்கு இப்போது வருமான வரித்துறை செக் வைக்க கண்டிப்பாக காரணம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications