இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்!
சென்னை: நாடு முழுவதும் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட இ-20 பெட்ரோலை (e20 petrol) இன்று (ஏப்ரல் 1) முதல் கட்டாயமாக விற்பனை செய்ய மத்திய அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதோடு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீப காலமாக மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக உலகின் பல நாடுகளில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்படும் அபாயம் இருப்பதாக வெளியான தகவலால் வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்தனர்.

சில இடங்களில் வணிக சிலிண்டர்கள் மற்றும் எரிபொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் பேனிக் பையிங் எனும் அச்சத்தால் அதிகமாக வாங்கும் போக்கு அதிகரித்தது. இதனால் பெட்ரோல் பங்குகளில் வழக்கத்தை விட ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இ-20 பெட்ரோல்
இந்த நிலையில், பெட்ரோல் விநியோகம் தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய அரசு, எரிபொருள் பயன்பாட்டை சீராக வைத்திருக்க பல்வேறு மாற்று வழிகளை ஆய்வு செய்தது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை கட்டாயமாக பயன்படுத்தும் திட்டத்தை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக 2030-ம் ஆண்டுக்குள் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை அடைய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய உலகளாவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த இலக்கை முன்கூட்டியே நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசு
இதன் படி, 2025-26 நிதியாண்டுக்குள் முழுமையாக இ-20 பெட்ரோல் பயன்பாட்டை அமல்படுத்தும் பணிகள் வேகமடைந்துள்ளன. ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இ-20 பெட்ரோல் விற்பனை தொடங்கியிருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய உத்தரவால், அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த நடைமுறை முழுமையாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனால்
எத்தனால் என்பது இயற்கையாக தயாரிக்கப்படும் ஒரு மாற்று எரிபொருளாகும். கரும்பு, சோளம் போன்ற வேளாண் பயிர்களிலிருந்து இதை தயாரிக்க முடியும். பெட்ரோலுடன் எத்தனால் கலக்கப்படுவதால், எரிபொருள் எரியும் போது வெளியேறும் புகை மற்றும் மாசு அளவு குறையும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அளவையும் குறைக்க இது உதவும். இந்த திட்டம் விவசாயிகளுக்கும் ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இ-20 எரிபொருள்
குறிப்பாக கரும்பு உற்பத்தி அதிகரித்தால், சர்க்கரை ஆலைகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். கரும்பு கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது உள்ளிட்ட துணை தொழில்களும் வளர்ச்சி பெறும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்துக்கும் நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், புதிய வாகனங்களில் பெரும்பாலானவை இ-20 பெட்ரோலை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2023-ம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட பல வாகனங்கள் இ-20 எரிபொருளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளன.
பழைய வாகனங்கள்
ஆனால் பழைய வாகனங்களை பயன்படுத்தும் மக்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம் என வாகன நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, சில வாகனங்களில் எரிபொருள் மைலேஜ் சிறிதளவு குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், எ-20 பெட்ரோலால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவும் முக்கியமான முயற்சி என்பதால் சிரமங்களை பொறுத்துக் கொள்ள வேண்டுமென்கின்றது மத்திய அரசு.












Click it and Unblock the Notifications