குமரிக்கு பக்கத்துல சீனா- கூப்பாடு போடும் தமிழகம்-மத்திய அரசோ இலங்கைக்கு $100 மில்லியன் டாலர் கடன்
சென்னை: கன்னியாகுமரி அருகே கூப்பிடும் தூரத்தில் சீனா முகாமிட்டிருக்கிறது; இலங்கையே சீனாவின் காலனி நாடாகிக் கொண்டிருக்கிறது என தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்திய அரசை எச்சரித்து வருகின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசோ, இலங்கையில் சூரிய மின்சக்தி திட்டங்களுக்காக மேலும் $100 மில்லியன் டாலர் கடனுதவி கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் என சீனா வலுவாக காலூன்றி நிற்கிறது. இலங்கையில் சீனாவுக்கு சுயாட்சி பிராந்தியமாக துறைமுக நகரம் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் ராமேஸ்வரத்துக்கு அருகே உள்ள தீவுகளில் இந்தியா கேட்டிருந்த காற்றாலை திட்டங்களை சீனாவுக்கு வழங்கி இருக்கிறது இலங்கை. இந்த நடவடிக்கைகளால் இந்தியாவின் தெற்கு எல்லைக்கு சீனாவால் பேராபத்து காத்திருக்கிறது என்பதுதான் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் எச்சரிக்கை.

தமிழீழ அரசு- வைகோ
மேலும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் தனித் தமிழீழ அரசை உருவாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி இருந்தார். ஆனால் நாட்டி வடக்கு எல்லை, வடகிழக்கு எல்லை, மேற்கு எல்லை குறித்து கவலைப்படுகிற மத்திய அரசு தெற்கு எல்லையில் நெருங்கி நிற்கும் சீனா எனும் பேராபத்தை உணர்ந்ததாக தெரியவில்லை போலும்.

இந்தியாவின் கடனுதவி
தற்போது இலங்கையில் சூரிய மின்சக்தி திட்டங்களை செயல்படுத்த மேலும் $100 மில்லியன் டாலரை கடனுதவியாக கொடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம், இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் "வீடுகளிலும் அரசு கட்டிடங்களிலும் சூரியக்கலங்களை பொருத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இலங்கையில் முன்னெடுப்பதற்கு இந்த 100 மில்லியன் அமெரிக்க டாலர் பெருமதியான கடன் ஆதரவினை வழங்கும்" என தெரிவித்துள்ளது.

தமிழர் தரப்புடன் ஆலோசனை
அத்துடன் இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இன்று இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசினார். இரா.சம்பந்தன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு இந்த ஆலோசனையில் பங்கேற்றது. இலங்கை அரசாங்கத்தாலும் தமிழர் தரப்பினாலும் நிராகரிக்கப்பட்ட இத்துப்போன தீர்வுகளில் ஒன்றான, ஒற்றை இலங்கைக்குள் இலங்கையின் அரசியல் அமைப்பின் 13-வது திருத்தத்தின் கீழ் தமிழருக்கு அதிகாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என மீண்டும் மீண்டும் சலித்துப் போன வாக்குறுதியையே இந்திய தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு முன்னேற்றமும் இல்லை..
இலங்கையில் தமிழர்களின் தனிநாட்டுக்கான விடுதலை யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகளில் தமிழருக்கு அதிகாரம் கிடைக்க துரும்பையும் யாரும் எந்த தேசமும் கிள்ளிப் போட்டது கிடையாது. ஆகக் குறைந்தபட்சம் போர்க்குற்றங்களுக்கான விசாரணை நடவடிக்கை கூட இல்லை; காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் எங்கே என இலங்கையை கேட்க நாதியும் இல்லை. ஆனால் அரதப் பழசான 13-வது திருத்தம் பற்றியே இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்கின்றனர் தமிழர் பிரதிநிதிகள்.

சீனா குறித்து மவுனம் ஏன்?
இதேபோல் இலங்கையில் சீனாவின் அடுத்தடுத்த ஆதிக்கத்தை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுப்பது பற்றி எதுவும் பேசாமல் இப்படி எல்லாம் இலங்கைக்கு கடனுதவிகளை வாரி வழங்குவது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி, காயப்படுத்துவதுதான் என்பதும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்து. இலங்கைக்கு முட்டுக் கொடுத்து கொண்டிருக்காமல் இந்தியாவை சூழ்ந்திருக்கும் சீனாவின் பேராபத்தை உணர்ந்தேனும் ஆக்கப்பூர்வமான வலிமையான வெளியுறவு நடவடிக்கையைத்தான் மத்திய அரசு எடுத்தாக வேண்டும் என்பதும் தமிழர்களின் வேண்டுகோள்.












Click it and Unblock the Notifications