டோல் கேட்டில்.. இனி வரிசையில் நிற்க வேண்டாம்.. பயன்பாட்டிற்கு வந்த தடையற்ற 'MLFF' வசூல் முறை!
சென்னை: இந்திய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது சுங்கச் சாவடிகளில் (Toll Plazas) காத்திருக்கும் நீண்ட வரிசைகள். FASTag அறிமுகம் செய்யப்பட்ட பிறகு காத்திருப்பு நேரம் குறைந்திருந்தாலும், டோல் கேட்டுகளில் உள்ள தடுப்புகள் (Barriers) காரணமாக வாகனங்கள் வேகம் குறைக்க வேண்டிய சூழல் இன்னும் நீடிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மத்திய அரசு 'மல்டி லேன் ஃப்ரீ ப்ளோ' (Multi Lane Free Flow - MLFF) எனப்படும் சுங்க வசூல் முறையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. அதாவது டோல் கேட்டுகளில் நிற்காமல் செல்ல புதிய வழிமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
குஜராத் மாநிலத்தில் உள்ள NH-48 நெடுஞ்சாலையின் சூரத் - பருச் (Surat-Bharuch) பிரிவில் இந்த அதிநவீன வசதி முதன்முதலாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. குறிப்பாக, அந்தப் பகுதியில் உள்ள சோரயாசி சுங்கச் சாவடியில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து, இது நவீன இந்திய நெடுஞ்சாலைகளின் முக்கியமான மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

MLFF சுங்க முறை என்றால் என்ன?
மல்டி லேன் ஃப்ரீ ப்ளோ (MLFF) என்பது ஒரு தொழில்நுட்ப அடிப்படையிலான சுங்க வசூல் முறையாகும். இதில் வாகனங்கள் சுங்கச் சாவடியைக் கடக்கும்போது நிறுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.
தடுப்புகள் இல்லாத பாதை: இந்த அமைப்பில் தடுப்புகள் (Barriers) எதுவும் இருக்காது. வாகனங்கள் தங்களது வழக்கமான வேகத்திலேயே அந்தப் பகுதியைக் கடக்கலாம்.
FASTag மற்றும் ANPR தொழில்நுட்பம்: வாகனங்களில் உள்ள FASTag மற்றும் 'தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகாரம்' (Automatic Number Plate Recognition - ANPR) கேமராக்கள் மூலம் சுங்கக் கட்டணம் தானாகவே கழிக்கப்படும்.
தடையற்ற பயணம்: ஓட்டுநர்கள் வேகத்தைக் குறைக்கவோ அல்லது வரிசையில் நிற்கவோ தேவையில்லை என்பதால், பயணம் மிகவும் மென்மையானதாக அமையும்.
இந்த முறையினால் ஏற்படும் நன்மைகள்
தற்போது நடைமுறையில் உள்ள FASTag முறையிலும் கூட, வாகனங்கள் ஸ்கேனிங்கிற்காக ஒரு சில விநாடிகள் நிற்க வேண்டியுள்ளது. இது போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கிறது. ஆனால் MLFF முறை அந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்கிறது:
பயண நேரம் குறைப்பு: வாகனங்கள் நிறுத்தப்படாமல் செல்வதால், ஒட்டுமொத்த பயண நேரம் பெருமளவு குறையும்.
எரிபொருள் சேமிப்பு: வாகனங்கள் அடிக்கடி நிற்பதும், மீண்டும் கிளம்புவதும் தவிர்க்கப்படுவதால் எரிபொருள் வீணாவது தடுக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: எரிபொருள் மிச்சமாவதால் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை உமிழ்வு குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
நெரிசல் இல்லாத நெடுஞ்சாலைகள்: பண்டிகைக் காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சுங்கச் சாவடிகளில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இது நிரந்தரத் தீர்வாக அமையும்.
வணிகம் மற்றும் வாழ்வாதாரத்தில் தாக்கம்
இந்தத் திட்டம் தனிப்பட்ட பயணிகளுக்கு மட்டுமின்றி, சரக்கு போக்குவரத்து மற்றும் வணிகத் துறைக்கும் மிகப்பெரிய உந்துதலை அளிக்கும். வணிக ரீதியான வாகனங்கள் விரைவாகச் செல்வதால் Efficiency அதிகரிக்கும்.
எதிர்காலத் திட்டங்கள்
சூரத் - பருச் சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி ஒரு முன்னோட்டத் திட்டமாகும் (Pilot Project). இது வெற்றிகரமாகச் செயல்படும் பட்சத்தில், நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தற்போதுள்ள பழைய சுங்கச் சாவடிகளுக்குப் பதிலாக இந்தத் தடையற்ற MLFF முறை கொண்டு வரப்படும் என்று அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் சாலைக் கட்டமைப்பைத் தொழில்நுட்ப ரீதியாக நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இனி சுங்கச் சாவடிகளில் மணிக்கணக்கில் காத்திருந்த காலம் மறைந்து, மின்னல் வேகத்தில் நெடுஞ்சாலைப் பயணம் அமையும் நாள் வெகுதொலைவில் இல்லை.












Click it and Unblock the Notifications