உலகில் அதிக வாக்காளர்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்! மொத்தம் எவ்வளவு?
சென்னை: உலகிலேயே அதிக வாக்காளர்கள் நாடுகள் பட்டியலில் இந்தியா 97 கோடி வாக்காளர்களுடன் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. இது குறித்து புள்ளியியல் விவர ஆராய்ச்சியாளரும், முனைவருமான இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. எழுதிய கட்டுரை வருமாறு;
''அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி அதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளை முடுக்கிவிட்டு இருக்கிறது. இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி உடைய மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறித்த விவரத்தையும் தற்போது வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி இந்த ஆண்டு புதிதாக 2 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் 96 கோடியே 88 லட்சம் வாக்காளர்கள் புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்து வாக்களிக்கும் உரிமையைப் பெற்று இருக்கிறார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்த எண்ணிக்கை 91 கோடியாக இருந்தது.
வாக்காளர் பட்டியலில் தற்போது மேலும் சுமார் 6 கோடி பேர் புதிதாக இடம் பிடித்திருக்கிறார்கள். மொத்த வாக்காளர்களில் சுமார் 50 கோடி ஆண்களும், 47 கோடி பெண்களும் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையின் படி பார்த்தால் உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.
இதை வைத்துப் பார்க்கும் போது, ஒரு நாட்டில் ஜனநாயகத்தை நிறுவுவதில் இந்தியாவே மிகவும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்கிறது. உலகின் பல நாடுகளில், ஒட்டுமொத்த மக்கள் தொகையே ஒரு கோடிக்கும் கீழாக இருக்கும் நிலையில், இந்தியாவில் வாக்களிக்கும் நபர்களின் எண்ணிக்கை மட்டும் 97 கோடி என்பது ஒரு பிரமிப்பாக இருக்கிறது.
உலகின் வேறு எந்த நாட்டை விடவும் இந்தியாவில் ஜனநாயக சக்தி வலுமிக்கதாக உள்ளது. மக்கள் சக்திக்கு மீறி ஒன்றுமில்லை என்றால் மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்; எப்படிப்பட்ட மாற்றத்தையும் கொண்டு வரலாம் என்பது இந்தியாவுக்கு மிகச் சரியாகப் பொருந்தும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலாவது 97 கோடி வாக்காளர்கள் எனும் இந்தப் பிரம்மாண்டமான ஜனநாயக சக்தியின் பலம் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும்; அதன் கௌரவம் காக்கப்பட வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நடைபெறும் தேர்தலில் இந்த ஜனநாயக சக்தி தன் பொலிவையும், மதிப்பையும் இழப்பதால் வாக்குச் சீட்டு அடிப்படையிலான தேர்தல் நடத்தப்பட வேண்டும்; நாடு முழுவதும் இருக்கும் உண்மையான ஜனநாயக சக்திகளின் விருப்பமும் இதுதான்.
கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பே குடவோலை முறையில் மக்களாட்சியை நிறுவிய பெருமை நம் தமிழ் சமூகத்திற்கு உண்டு. அந்த வரலாற்று பாரம்பரியம் காட்டிய அந்தப் பாதையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் என்ற இந்த ஜனநாயக சக்தி மிகச் சரியாகப் பயன்படுத்தப்படும் பட்சத்தில் உண்மையான ஜனநாயகம் கிழக்குச்சூரியனாய் வெளிச்சம் பரப்பி எழும்.''












Click it and Unblock the Notifications