ஊக்கமருந்து பயன்படுத்திய இந்திய வீரர்கள்? ஜடேஜாவும் ஊசி போட்டார்.. அஸ்வின் சொன்ன முக்கிய விளக்கம்!
இந்திய வீரர்கள் ஊசி போட்டுக் கொள்வதாக சேத்தன் சர்மா பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: இந்திய வீரர்களின் உடற்தகுதி குறித்தும், ஊசி போட்டு இந்திய வீரர்கள் விளையாட தொடங்கி விடுகிறார்கள் என்றும் தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்திய வீரர்கள் காயமடையும் போது ஊசி போடுவது வழக்கமானது என்பதும், ஊக்க மருந்தில் சேராத ஊசிகளை எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மாவிடம் ஜீ தொலைக்காட்சி ஊடகம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பிசிசிஐ அமைப்பு குறித்தும், வீரர்கள் குறித்தும் ஏராளமான தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக இந்திய வீரர்கள் காயத்தில் இருந்து குணமடையவும், உடற்தகுதியுடன் விளையாடவும் ஊசி எடுத்துக் கொள்வது பற்றி பேச்சுகள் கிரிக்கெட் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்திய வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்துகிறார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உடற்தகுதி
இதுகுறித்து சேத்தன் சர்மா கூறுகையில், இந்திய வீரர்களுக்கு உடற்தகுதி இல்லை. ஆனால் அவர்கள் விளையாடுவதற்காக ஊசி போடுகிறார்கள். அவர்கள் 80% உடற்தகுதியுடன் கூட விளையாட தயாராக உள்ளனர். ஊசி போட்டு விளையாட ஆரம்பித்து விடுகிறார்கள். பும்ராவுக்கு பெரிய காயம் இருந்ததால், அவரால் ஊசி போட்டுக்கொண்டு விளையாட முடியவில்லை. அதைத் தவிர, ஓரிரு வீரர்கள் தனிப்பட்ட முறையில் ஊசி போட்டுக்கொண்டு விளையாடத் தகுதியானவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.

சேத்தன் சர்மா
இந்திய அணி வீரர்கள் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்களா? என்று சேத்தன் சர்மாவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இல்லை. நான் ஊசிகளைப் பற்றி பேசுகிறேன். அவர்கள் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொண்டால் அது ஊக்க மருந்துகளில் வரும். ஊக்கமருந்து எதிர்ப்பு ஊசியில் எந்த ஊசி வரும் என்று இந்திய அணி வீரர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

ஊசி போட்ட ஜடேஜா
இதனால் இந்திய வீரர்கள் ஊக்க மருந்தில் சேராத ஊசிகளை எடுத்து கொள்வதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூட தனது யூ டியூப் வீடியோ ஒருமுறை கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சென்று இந்திய அணி வாகை சூடிய போது, மூன்றாவது டெஸ்ட் போட்டியை அஸ்வின் - விஹாரி இணை சேர்ந்து நின்று டிரா செய்தது. அப்போது கைகளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜடேஜா களத்தில் இறங்கவில்லை.

அஸ்வின் சொன்ன விளக்கம்
அதுகுறித்து அஸ்வின் கூறுகையில், ஜடேஜாவும் ஊசி போட்டுக் கொண்டு பேட்டிங் செய்ய தயாராக இருந்தார் என்று தெரிவித்திருப்பார். இதன் மூலம் இந்தியா அணி ஐசிசி மற்றும் பிசிசிஐ அமைப்புகளால் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தி ஊசி போட்டுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

விமர்சகர்கள் கருத்து
இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகையில், விளையாட்டு வீரர்கள் ஊசி போட்டுக் கொள்வது சாதாரணமானது. தடை செய்யப்பட்ட மருந்துகளையோ, ஊக்க மருந்துகளையோ பயன்படுத்தினால் மட்டுமே அது தவறாகும். காயத்தில் இருந்து குணமடையவும், வலி நிவாரணியாகவும் அனுமதிக்கப்பட்ட ஊசிகளை எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications