அட்டூழியம்.. மத்திய அரசு கண்டிக்காதது தான் இலங்கையின் துணிச்சலுக்கு காரணம்.. எகிறி அடித்த அன்புமணி!
சென்னை : இந்திய அரசு கண்டிக்காததும், எச்சரிக்காததும் தான் மீண்டும், மீண்டும் அத்துமீறும் துணிச்சலை சிங்கள அரசுக்கு கொடுத்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும், ஒரு படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதான் பிரச்சினையே! அதிகாரம் இன்று என்னிடம் இருந்திருந்தால்! அன்புமணி சொன்னாரு பாருங்க ஒரு விளக்கம்
இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் நேற்று விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு பாரம்பரிய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது நள்ளிரவு அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் 7 தமிழக மீனவர்களையும் கைது செய்தனர். அவர்கள் சென்ற விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
அன்புமணி கண்டனம்
இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி சேர்ந்த மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மீண்டும் அத்துமீறல்
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை கடந்த 20ஆம் தேதி இலங்கைப் படையினர் கைது செய்தனர். அவர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கைப் படை மீண்டும் தனது அத்துமீறலை அரங்கேற்றியிருக்கிறது.
10வது முறையாக
கடந்த ஜூன் மாதம் மீன்பிடி பருவம் தொடங்கிய பிறகு நடைபெறும் 10வது கைது நடவடிக்கை இதுவாகும். இதுவரை மொத்தம் 84 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசு கண்டிக்காததும், எச்சரிக்காததும் தான் மீண்டும், மீண்டும் அத்துமீறும் துணிச்சலை இலங்கை அரசுக்கு கொடுத்துள்ளது.
எச்சரிக்க வேண்டும்
தமிழக மீனவர்களை தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதோ கூடாது என இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.