சூப்பர் நியூஸ்.. தென்மேற்கு பருவமழை மே 31-ல் தொடங்குகிறதாம்.. இந்திய வானிலை ஆய்வு மையம்!
டெல்லி: இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை மே 31-ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இந்த இரண்டு காலங்களிலும் பெரும்பாலும் நல்ல மழை பெய்யும். இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்து இருந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட ஒருநாள் முன்னதாக அதாவது மே 31-ம் தேதி முதல் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நேற்று ஒடிசாவில் கரையை கடந்த யாஸ் புயல் தென் மேற்கு பருவமழை காற்றை மேலும் வலுப்படுத்த உதவியது என்றும் மாலத்தீவு-கொமொரின் பகுதி, தென்மேற்கு மற்றும் வங்காள விரிகுடாவின் கிழக்குப் பகுதி, தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வங்காளத்தின் மேற்கு மைய விரிகுடாவின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவின் சந்த்பாலியில் 29 செ.மீ; கரத்பூர் மற்றும் ராஜ்கனிகா தலா 25 செ.மீ மழை பெய்துள்ளன. தமிழகத்தில் கன்னியாகுமரியில் 24 செ.மீ. கேரளாவில் இடுக்கி 19 செ.மீ. திருவனந்தபுரம் 17 செ.மீ. மழை பெய்துள்ளன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications