“பூணூல்” அறுப்பு போராட்டம்.. சர்ச்சையாய் பேசிய “தடா” ரஹீம் அதிரடி கைது.. 3 பிரிவுகளின் கீழ் வழக்கு.!
சென்னை : கர்நாடக ஹிஜாப் விவகாரத்தை காரணம் காட்டி தமிழகத்தில் பூணூல் அறுக்கும் போராட்டத்தை அறிவித்த, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துல் ரஹீம் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் உடுப்பியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் விடாததால் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
சென்னையில் கால்களை துண்டாக்கி வாலிபர் கொடூர கொலை! 'திருந்தி வாழ்ந்த' 4 மாதத்தில் தீர்த்துகட்டினர்
ஹிஜாப் அணிந்ததற்கு சிலர் கடுமையக எதிர்வினையாற்றி வருகின்றனர். ஹிஜாப் விவகாரத்திற்கு பதிலடி தரும் விதமாக தமிழகத்தில் பூணூல் அறுப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய தேசிய லீக் கட்சி அமைப்பை சேர்ந்த தடா ரஹீம் உள்ளிட்டோர் அறிவித்தனர்.
பூணூல் அறுப்பு
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், " சமீபத்தில் கர்நாடகாவில் இருந்து கோட்சேவின் வாரிசுகளால் ஆரம்பிக்கப்பட்ட ஹிஜாபுக்கு எதிரான பாசிச பயங்கரவாதம் தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோட்சேவின் வாரிசுகள் அணியும் பூணூல் அறுக்கும் போராட்டம்.. இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக பூணூல் அறுக்கும் போராட்டத்தை காஞ்சி சங்கர மடத்தில் இருந்து தொடங்குவோம்.. " என கூறப்பட்டிருந்தது.
கடும் கண்டனம்
இந்நிலையில் இந்திய தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் அப்துல் ரஹீம் அறிவித்துள்ள பூணூல் அறுப்பு போராட்டத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. தமிழ்நாடு பிராமணர் சமாஜம் மட்டுமல்லாது, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளும் ரஹீமுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு பூணூல் அறுப்பு போராட்டம் கயமைத்தனமானது என மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லாஹ் கூறியிருந்தார்.
போலீசில் புகார்
இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாநகர பொதுச்செயலாளர் மேகநாதன் தடா ரஹீம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி புகார் அளித்தார். இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீம் காஞ்சி சங்கர மடத்தில் இருந்து கோட்சேவின் வாரிசுகளை அணியும் பூணூல் அழிக்கும் போராட்டத்தை தொடங்குவோம் என பேசியுள்ளதாகவும் இது இஸ்லாமிய சமூக மக்களின் மனதில் நஞ்சை விதைத்து மத ரீதியிலான கலவரத்தை உருவாக்கும் என்பதால் அவரை கைது செய்து கட்சியையும் தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
“தடா” ரஹீம் கைது
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரகீம் மீது கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், இரு பிரிவினரிடையே வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தடா ரகீம் கைது செய்யப்பட்டதை அடுத்து மேலப்பாளையம், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அந்த கட்சியினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.