Train Reservation Status..நகம் கடித்து காத்திருக்க வேண்டாம்! ரயில் பயணிகளுக்கு நிம்மதி தரும் மாற்றம்
டெல்லி: ரயில் பயணிகளுக்கு நீண்ட காலமாக இருந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ரயில்வே முக்கிய மாற்றம் ஒன்றை அறிவித்துள்ளது. இனிமேல் ரயில் புறப்படும் நேரத்திற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே பயணிகளுக்கு டிக்கெட் உறுதிப்படுத்தல் (Reservation Status) விவரங்கள் தெரிய வரும் வகையில், முன்பதிவு பட்டியல் (Reservation Chart) தயாரிக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய துறை என்றால் அது ரயில்வே தான். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்து பயணிகளையும் இணைக்கிறது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
நாட்டிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட துறையாக ரயில்வே இருக்கிறது. குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் என்பதால் மக்களின் சிறந்த தேர்வாக ரயில்வே இருக்கிறது.

இந்திய ரயில்வே
பாசஞ்சர் ரயில்கள் மட்டும் இல்லாது எக்ஸ்பிரஸ் ரயில்கள், வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர் மின்சார ரயில்கள் ஆகியவையும் இந்தியா முழுமையும் இயக்கப்படுகிறது. பல நாட்களுக்கு முன்பே ரயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். மேலும் பயணிகளுக்கு விரைவான அதே நேரத்தில் சிக்கல் இல்லா சேவை வழங்க ரயில்வே புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து ரயில்களுக்கான காத்திருப்பு காலத்தை 120 நாட்களாக ரயில்வே மாற்றி உள்ளது. இதன் மூலம் அனைத்து வகை ரயில்களுக்கும் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய முடியும்.
ரயில் முன்பதிவு
இந்நிலையில், ரயில் பயணிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, இதுவரை ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது. இதனால், 'வெயிட்டிங் லிஸ்ட்' அல்லது 'ஆர்.ஏ.சி' நிலையில் உள்ள பயணிகள் கடைசி நிமிடம் வரை பதற்றத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இந்த சிக்கலைக் கருத்தில் கொண்டு தான், ரயில்வே வாரியம் இந்த புதிய முடிவை எடுத்துள்ளது.
ஆர்ஏசி டிக்கெட்
புதிய விதிமுறைகளின் படி, பிற்பகல் 2.01 மணி முதல் இரவு 11.59 மணி வரை புறப்படும் ரயில்களுக்கும், நள்ளிரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கும்,
முதல் முன்பதிவு பட்டியல், ரயில் புறப்படும் நேரத்திற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே தயாரிக்கப்படும். இந்த மாற்றத்தின் மூலம், பயணிகள் தங்களது டிக்கெட் உறுதி நிலையை முன்னதாகவே தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள், இணைப்பு பயணங்கள் (connecting travel), தங்குமிடம், மாற்றுத் திட்டங்கள் போன்றவற்றை முன்கூட்டியே திட்டமிட இது பெரிதும் உதவும்.
முன்பதிவு பட்டியல்
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் பயணிகள், ரயில் நிலையத்தை அடைவதற்கே பல மணி நேரம் செலவிட வேண்டியிருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் டிக்கெட் உறுதியாகாததால் அவர்கள் கடும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையை தவிர்க்கவே, முன்பதிவு பட்டியல் தயாரிப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ரயில்வே அறிவிப்பு
இந்த புதிய நடைமுறையை உடனடியாக அமல்படுத்துமாறு, அனைத்து மண்டல ரயில்வே நிர்வாகங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், பயணிகளுக்கு அதிக வெளிப்படைத்தன்மை, திட்டமிடல் வசதி மற்றும் மனநிம்மதி கிடைக்கும் என ரயில்வே அமைச்சக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த மாற்றம், தினமும் ரயில்களில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு பயனளிக்கும் ஒரு முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications