ரயிலில் யாரெல்லாம் 75 சதவீதம் வரை கட்டண சலுகை பெறலாம் தெரியுமா? முழு விவரம் இதோ
சென்னை: உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க்காக திகழும் இந்திய ரயில்வே, தினமும் 13,600 ரயில்களின் மூலம் 2 கோடி பயணிகளை பாதுகாப்பாக பயண இடங்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது. சரக்கு போக்குவரத்துடன் ஒப்பிடுகையில், பயணிகள் வருவாய் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், பயணிகளின் வசதிக்காக பல்வேறு சலுகைகளையும் ரயில்வே செயல்படுத்திதான் வருகிறது.
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்க, பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது. ரயில்கள் வேகத்தையும் அதிகரித்துள்ளது. இதோடு மட்டுமல்லாமல், சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, பல்வேறு பிரிவினருக்கு சலுகைகளையும் வழங்கி வருகிறது.

உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்காமல் இல்லை. முதியோருக்கு வழங்கிய கட்டணச் சலுகை ரத்தாகிவிட்டதே என்பதுதான் அது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பல எம்பிக்கள் கேள்வி எழுப்பியும் மத்திய அரசு அதற்கு மட்டும் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால், தற்போது நடைமுறையிலுள்ள சில சலுகைகள், உங்களுக்கு தெரிந்த யாருக்காவது உதவக் கூடும். அதுகுறித்த ஒரு பார்வை.
புற்றுநோய், கிட்னி நோய், காசநோய், தாலசீமியா, மனநோய், பார்வைக் குறைபாடு போன்ற தீவிர நோயாளிகளுக்கு ஸ்லீப்பர் மற்றும் ஜெனரல் பிரிவுகளில் பயணிக்கும் போது 75% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம், சிகிச்சைக்காக வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கு செல்லும் நோயாளிகளுக்கு பெரும் தொகை மிச்சமாகிறது.
கல்வி நோக்கம்: உயர்கல்வி கற்க வெகு தொலைவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு, அவர்கள் பயணிக்கும் ரயில் பிரிவைப் பொறுத்து 50% முதல் 75% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்தப் பயணத்தை குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ள முடியும்.
போட்டித் தேர்வு: UPSC, SSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்களும் இந்த சலுகையைப் பெறலாம். தேர்வு அனுமதிச் சீட்டுடன் பயணிக்கும் போது, அவர்களுக்கு குறிப்பிட்ட சலுகை வழங்கப்படுகிறது.
இந்திய ரயில்வே: இந்திய ரயில்வேயின் இந்த சலுகைகள், பயணிகளின் அன்றாட வாழ்க்கையில் ஓரளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். எனவே உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தகவலை பாஸ் செய்துவிடலாமே பாஸ்.
வந்தே பாரத்: இந்திய ரயில்வே தற்போது அதிவேக ரயில்களை இயக்கி வருகிறது. ராஜதானி மற்றும் வந்தே பாரத் போன்ற ரயில்கள் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்குகின்றன. மேலும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க இந்திய ரயில்வே தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால், விபத்துகள் எண்ணிக்கையை குறைக்கவும் மனசு வைக்கனும் ரயில்வே என்பதே மக்கள் கோரிக்கை.












Click it and Unblock the Notifications