அம்பானி, அதானியை விட அதிகம்! தினமும் ரூ.7.4 கோடி வரை நன்கொடை! கொடையாளர்களின் ஷிவ் நாடார் முதலிடம்!
சென்னை: அதிக நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள் பட்டியலில், எச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடத்தில் இருக்கிறார். தினந்தோறும் ரூ.7.4 கோடி என ஆண்டுக்கு ரூ.2,708 கோடி அளவுக்கு ஷிவ் நாடார் நன்கொடை வழங்கியுள்ளார்.
ஷிவ் நாடார் அறக்கட்டளை மூலம் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கான வித்யாகியான் பள்ளிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் நன்கொடைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஷிவ் நாடாரின் நன்கொடை நிதி எவ்வளவு பெரியது?
'எடெல்கிவ் ஹுருன் இந்தியா பிலாந்த்ரோபி' என்பது, இந்தியாவின் தொழிலதிபர்கள் எவ்வளவு நன்கொடை வழங்குகிறார்கள் என்பதை ஆய்வு செய்து வெளியிடும் அமைப்பாகும். அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்த அமைப்பு வெளியிட்ட பட்டியலில், அதிக அளவில் நன்கொடை செய்த தொழிலதிபர் என்கிற பெருமையை ஷிவ் நாடார் தொடர்ந்து 4 ஆண்டுகளாக பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு வெளியான பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடத்தில் இருக்கிறார். இவர் வழங்கிய ரூ.2,708 கோடி என்பது மிகப்பெரிய நிதி. இந்த நிதியை கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை ஒரு மாதத்திற்கு செயல்படுத்த முடியும்.
அம்பானி, அதானி
ஷிவ் நாடாரை தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அதிக நன்கொடை வழங்கும் தொழிலதிபர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டு தினந்தோறும் ரூ.1.7 கோடி என ஆண்டுக்கு ரூ.626 அளவுக்கு இவர் நன்கொடை வழங்கியிருக்கிறார். சுகாதாரம், கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சியை நோக்கமாக கொண்ட ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. முந்தைய ஆண்டுகளில் இப்பட்டியலில் முதலிடம் பிடித்த விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி, இம்முறை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் இந்த ஆண்டு ரூ.526 கோடியை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். இவரது அறக்கட்டளை இந்தியா முழுவதும் பள்ளி கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் ஊக்கம் அளித்து வருகிறது.
மற்ற நன்கொடையாளர்கள்
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது குடும்பத்தினர் 440 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். அதேபோல கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் 386 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். அதானி, தான் நடந்தும் அறக்கட்டளை மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றை மேம்படுத்த முயன்று வருகிறார். இவர்களை தொடர்ந்து அடுத்த இடத்தில் ரோஹினி நிலேகனி பிலாந்த்ரோபிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஹினி நிலேகனி இருக்கிறார். நாட்டின் சிறந்த பெண் கொடையாளியாகத் திகழும் இவர், ரூ.204 கோடி நன்கொடை அளித்துள்ளார். நீர்நிலை பாதுகாப்பு, ஊடக சுதந்திரம் போன்றவற்றிற்கு இந்த நிதியை பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
மொத்த நன்கொடை எவ்வளவு?
நாடு முழுவதும் உள்ள தொழிலதிபர்கள், இந்த ஆண்டு மட்டும் மொத்தமாக ரூ.10,380 கோடி அளவுக்கு நன்கொடையை வழங்கியுள்ளனர். நன்கொடையாக வழங்கப்படும் நிதி கடந்த மூன்று ஆண்டுகளில் 85% அதிகரித்திருக்கிறது. இந்நிதி பெரும்பாலும் கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டை நோக்கமாக கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளிக்கும் தனி நபர்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் இரண்டாக இருந்தது, 2025 ஆம் ஆண்டில் 18 ஆக உயர்ந்துள்ளதையும் அறிக்கை காட்டுகிறது. அதிக நன்கொடை அளிப்பவர்களில் மும்பை முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் பெங்களூரு உள்ளன.
ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளிக்கும் தனி நபர்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் இரண்டாக இருந்தது. 2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதையும் அறிக்கை காட்டுகிறது. அதிக நன்கொடை அளிப்பவர்களில் மும்பை முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் பெங்களூர் உள்ளன.












Click it and Unblock the Notifications