சென்னை, கோவை விமான நிலையங்களில் இண்டிகோ விமான சேவை ரத்து.. பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!
சென்னை: சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ விமானப் பயணிகளை சென்னை விமான நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு இண்டிகோ நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது இண்டிகோ நிறுவனம். உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் நாளொன்றுக்கு 2200க்கும் மேலான விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, அந்த நிறுவனம் விமானம் ரத்து, விமானம் தாமதம் உள்ளிட்ட தீவிர பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

தொழில்நுட்ப கோளாறுகள், மோசமான வானிலை உள்ளிட்டவை இந்த குழப்பத்திற்கு காரணமாக கூறப்பட்டாலும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அண்மையில் அறிமுகப்படுத்திய FDTL எனப்படும் விமான கடமை நேர வரம்பு விதிமுறை இந்த சிக்கலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. விமானப் பணியாளர்களுக்கு குறிப்பாக, விமானிகளுக்குத் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள கடுமையான விமானப் பணிநேரம் மற்றும் ஓய்வு விதிகள் பின்பற்றுவதற்கு ஏற்ற போதிய எண்ணிக்கையில் விமானிகள் இண்டிகோவிடம் இல்லை.
இதனால் இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 95 விமானங்கள், மும்பையில் 85 விமானங்கள், ஹைதராபாத்தில் 70 விமானங்கள், பெங்களூருவில் 50 விமானங்கள் நேற்று வியாழக்கிழமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன. இதேபோல், தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான இண்டிகோ விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்துக்கு நள்ளிரவு முதல் வருகை தரவேண்டிய மற்றும் புறப்பட வேண்டிய 65 இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 7 இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, விமான நிலையத்துக்குள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், இண்டிகோ விமானப் பயணிகளை நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று அந்நிறுவனம் பாதுகாப்புப் படையிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால், இண்டிகோ விமானத்தில் செல்லத் திட்டமிட்டிருந்த பயணிகள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் கடும் அவதிக்குள்ளாகினர். பலர் விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications