எரிபொருளுக்கு தனி கட்டணம்! விமான பயணிகளுக்கு ஷாக் கொடுத்த இண்டிகோ நிறுவனம்!
சென்னை: பெட்ரோல்-டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், இனி எரிபொருளுக்கு என தனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேற்கு ஆசிய மோதல்களால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான இண்டிகோவும், ஏர் இந்தியாவும் அரசு நிவாரணம் கோரி வருகின்றன. எரிபொருள் வரிகளைக் குறைக்குமாறும், தனியார் விமான நிலையக் கட்டணங்களைக் கட்டுப்படுத்தும்படியும் மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி நெருக்கடி
பாகிஸ்தான் வான்வெளிக்கான இராஜதந்திர தடை ஒருபுறம் இருக்க, ஈரான் மோதலால் மேற்கு ஆசிய வான்வெளியைப் பயன்படுத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இத்தகைய இரட்டைச் சுமையால் இண்டிகோ, ஏர் இந்தியா போன்ற விமான நிறுவனங்கள் நீண்ட வழித்தடங்களில் சென்று அதிக சர்வதேச இயக்கச் செலவுகளைச் சந்திக்க நேர்வதால், நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது.
இண்டிகோ பிரிட்டனுக்கு ஆப்பிரிக்கா வழியாகவும், ஏர் இந்தியா வட அமெரிக்கா செல்லும் சில விமானங்களுக்கு கூடுதல் நிறுத்தம் செய்தும் விமானங்களை இயக்குகின்றன. இதனால், வரிகள், கட்டணங்களில் நிதி நிவாரணம் வழங்க இந்திய அரசிடம் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்
விமான நிறுவனங்களின் மொத்த செலவில் 30-40% விமான போக்குவரத்து டர்பைன் எரிபொருள் (ATF) செலவாகும். இதற்கு 11% மத்திய அரசு வரியும், 29% வரை மாநில வரிகளும் விதிக்கப்படுகின்றன. இண்டிகோ இந்த வரியைக் குறைக்க நிதியுதவி கோரி வருகிறது. இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கருத்து தெரிவிக்கவில்லை.
இண்டிகோவும், ஏர் இந்தியாவும் தனியார் விமான நிலையங்களில், குறிப்பாக பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களை நெறிப்படுத்தக் கோரியுள்ளன. இவை அரசு விமான நிலையங்களை விட அதிகமாக உள்ளதால் குறைக்கப்பட வேண்டும் என நிறுவனங்கள் வாதிடுகின்றன.
விமானங்கள் ரத்து
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் மார்ச் 9 வரை, இந்த இரண்டு விமான நிறுவனங்கள், மேற்கு ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்காவிற்கான 1,230 திட்டமிடப்பட்ட விமானங்களில் 64 சதவீதத்தை இயக்கவில்லை.
இப்படி இருக்கையில், தூரத்தை பொறுத்து விமான பயண கட்டணத்தை மாற்றியமைக்க இரண்டு நிறுவனங்களும் முடிவெடுத்துள்ளன. அதன்படி
0 - 500 கி.மீ₹425, 501 - 1000 கி.மீ₹750, 1001 - 1500 கி.மீ₹1,100, 1501 - 2500 கி.மீ₹1,500, 2501 - 3500 கி.மீ₹1,900, 3501 கி.மீ-க்கு மேல்₹2,300 என பயண கட்டணத்தை வசூலிக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த கட்டணம் நாளை முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications