தெற்கு தேயாது..தங்கமாய் ஜொலிக்கப் போகுது தென் தமிழ்நாடு! மு.க.ஸ்டாலின் கையில் சூப்பர் திட்டம்..மாஸ்!
சென்னை: தொழில் வளர்ச்சியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற வட மாவட்டங்களே முன்னணியில் இருக்கும் நிலையில் தென் தமிழ்நாட்டில் தொழில்துறையை வளர்ச்சி பெற வைக்கும் வகையில் தூத்துக்குடியில் இன்று தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையலுக்காக உள்ளன.
தேசிய அளவில் மட்டுமல்ல தமிழ்நாடு அளவிலும் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கருத்து நிலவுகிறது. காரணம் தமிழகத்தை பொறுத்தவரை தொழில் நிறுவனங்கள் அதிகம் இருப்பது வட மாவட்டங்களில் தான்..
திருவள்ளூர் தொடங்கி சென்னை, காஞ்சிபுரம், அரியலூர் வரை மிகப் பெரிய தொழிற்சாலைகளும் வாகன உற்பத்தி மையங்களும் அமைந்து இருக்கிறது. ஏர்போர்ட், துறைமுகம் உள்ளிட்டவை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிக அளவு தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது.

தென் தமிழகத்திலும் குறிப்பாக தூத்துக்குடியில் விமான நிலையம், துறைமுகம் இருந்த போதும் பெரிய அளவிலான நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வரவில்லை. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு அமைந்ததும் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் தொழில் துறையை ஊக்குவிக்க புதிய திட்டத்தை தமிழ்நாடு வகுத்துள்ளது. 'டிஎன் ரைசிங்' என்ற பெயரில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு இன்று தூத்துக்குடியில் நடைபெறுகிறது. 'உதயமாகிறது தென் மாவட்டங்களில் தொழில் புரட்சி' என்ற முழக்கத்தோடு இந்த மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தூத்துக்குடியில் நடைபெறும் இந்த மாநாட்டில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் சுமார் 3254 கோடி முதலீடு ஈர்க்கப்படும். இந்த 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 49 ஆயிரத்து 845 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோல ஐந்து தொடக்க விழாக்கள் நடைபெறுகிறது. இதன் மூலம் 2530 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 3,600 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறது தமிழ்நாடு அரசு.
குறிப்பாக இன்று முதலீட்டாளர்களை ஈர்க்க தூத்துக்குடி நடக்கும் மண்டல அளவிலான முதல் மாநாட்டில் வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையை துவக்கி வைத்தார் முதலமைச்சர். தொடர்ந்து திருச்சி, கோவை, கிருஷ்ணகிரி என பல மாவட்டங்களில் மண்டல அளவிலான மாநாடுகள் நடத்தப்பட இருக்கிறது. வடமாவட்டங்களுக்கு இணையாக தென் மாவட்டங்களில் தொழில் துறையை வலுப்படுத்துவதோடு தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய இந்த மாநாடு வழிவகுக்கும் என்கின்றனர்.
உலக அளவிய முதலீட்டாளர்களை ஈர்க்க நடத்தப்படும் மண்டல அளவிலான மாநாட்டுக்கு 'டிஎன் ரைசிங்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களை சந்திக்கும் போதெல்லாம் தமிழகம் தொழில்துறைக்கு மற்றும் சமூக அளவில் மிக வலுவான கட்டமைப்பை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி உள்ள தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, எங்கு வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம் கண்ணை மூடிக்கொண்டு இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம். தொழில்துறைக்கு தமிழ்நாடு தயாராக இருப்பதை தொழில் நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. தொடர்ந்து கோவை திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் மண்டல முதலீட்டு மாநாடுகள் நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications