இபி கனெக்சன் வாங்கிட்டீங்களா.. தமிழக விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. உடனே போய் கேளுங்க
சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள், இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெறலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்சார வாரியம் ஏழை விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இலவச மின் இணைப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் இது அவ்வளவு எளிதானது அல்ல. சீனியாரிட்டி அடிப்படையில் பல ஆண்டுகள் காத்திருந்து பெற வேண்டும்.

இலவச மின்சாரம் பெறுவதற்கான வழிமுறை என்ன? ஒவ்வொரு ஆண்டும், எவ்வளவு பேருக்கு இலவச மின்சாரம் வழங்கலாம் என்பதை தமிழக அரசுதான் தீர்மானிக்கிறது. அதற்குத் தகுந்தவாறு, விண்ணப்பங்களின் பதிவு அடிப்படையில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. தேவைப்படும் சான்றுகளுடன், சம்பந்தப்பட்ட பகுதியின் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அங்கு, பதிவுக் கட்டணமாக 50 ரூபாய் செலுத்தினால், பதிவு எண் மற்றும் தேதி குறிப்பிடப்பட்ட உரிய ஒப்புகை அட்டை வழங்குவார்கள்.
எப்படி கிடைக்கும்: பதிவு மூப்பு அடிப்படையில், இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும். இத்திட்டத்தில் அனைத்துச் சமூகத்தினரும் விண்ணப்பிக்கலாம். இதுதான் இலவச மின்சாரம் பெறுவதற்கான பொதுவான வழிமுறை. அதேநேரம் இலவச மின் இணைப்பு பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
அதேநேரம் தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெறலாம். இதற்கு லட்சங்களில் செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
தட்கல் மின் இணைப்பு 2023 : விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பம் பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு மின் இணைப்பு வழங்கும் திட்டம் (தட்கல்) ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தட்கல் திட்டத்தின்கீழ், விவசாய மின்இணைப்புக்கு விண்ணப்பங்களை மின்சார வாரியம் பெற்று வருகிறது. இத்திட்டத்தில் 5 குதிரைத் திறன் வரையிலான இணைப்பு பெற ரூ.2.50 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும். 5 முதல் 7.50 குதிரைத் திறன் வரை ரூ.2.75 லட்சம் செலுத்த வேண்டும். 10 குதிரைத் திறன் வரை ரூ. 3 லட்சமும், 15 குதிரைத் திறனுக்கு ரூ.4 லட்சமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், இணைப்புபெற மின்வாரியத்தின் இணையதளத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பித்த விவசாயிகள் தட்கல் திட்டத்துக்கு மாற விரும்பினால் செயற்பொறியாளர் அலுவலகத்தில் கடிதம் பெற வேண்டும். முழு கட்டணம் செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்இணைப்பு வழங்கப்படும்.
தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெற விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள செயற்பொறியாளர் இயக்குதலும் பராமரித்தலும் அலுவலகத்தில் விருப்ப கடிதம் மற்றும் உரிய வருவாய் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இதன்படி மின் இணைப்பு பெற விருப்பம் மனு அளிப்பதற்கு முன்பே பெயர் மாற்றம், புல எண் மாற்றம் மற்றும் தேவைப்படின் தடையில்லா சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தட்கல் திட்டத்தில் மின் பளு மாற்றத்திற்கு அனுமதி இல்லை. மேலும் இந்தத் திட்டத்தில் 15 எச்.பி. வரை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இதனிடையே தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, "தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடைமுறை படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள், இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதியில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications