நாகூர் ஹனிபாவின் எதிரொலி! இஸ்லாமிய பாடகர் இறையன்பன் குத்தூஸுக்கு ஸ்டாலின் வழங்கிய அரசுப் பதவி!
சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் துணைத் தலைவராக இறையன்பன் குத்தூஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக பாடகராகவும், இஸ்லாமிய பாடகராகவும் விளங்கும் இறையன்பன் குத்தூஸ் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் பெற்றிருக்கிறார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் த.மஸ்தான் அண்மையில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் வகித்து வந்த பதவியிடம் காலியாக இருந்து வந்தது.
இந்தப் பதவியை பிடிப்பதற்காக திமுகவில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த பிரமுகர்கள் பலரும் முட்டி மோதினர். இதனிடையே கடைசியாக குத்தூஸுக்கு இந்த பதவியை வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

குத்தூஸை பொறுத்தவரை திமுக தலைமை நிலையச் செயலாளராக இருந்து மறைந்த ஆயிரம் விளக்கு உசேனின் மருமகன் ஆவார். இறையன்பன் குத்தூஸின் குரலும் நாகூர் ஹனிபாவின் குரலும் ஒன்று சொன்னது போல் இருக்கும் கூடுதல் தகவல்.
பாடும் போது பாடல் வரிகளில் நாகூர் ஹனிபா எந்தளவுக்கு தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்துவாரோ அதேயளவுக்கு இறையன்பன் குத்தூஸும் தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்தக் கூடியவர்.
அண்மையில் உதயநிதி ஸ்டாலினுக்காக குத்தூஸ் பாடிய ''கருப்பு சிவப்பு படையின் வீரன் களத்தில் வெல்லும் துணிச்சல்காரன்'' என்ற பாடலானது திமுகவினர் மத்தியில் மிகவும் பிரபலமானது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் துணைத் தலைவராக குத்தூஸ் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் தலைவராக காங்கிரஸை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications