தபால் வாக்கு குளறுபடி.. மாற்றி ஓட்டு வாங்கிய அதிகாரிகள்.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
சென்னை: சட்டமன்றத் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தபால் வாக்கு பெறுவதில் குளறுபடி கண்டறியப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பெறும் பணிகள் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இப்பணிகள் நடைபெறும் போது, கதவாளம் கிராமத்தைச் சேர்ந்த 85 வயதுடைய மூத்த வாக்காளரிடமிருந்து பெறப்பட வேண்டிய தபால் வாக்கு, அதே பெயர் கொண்ட 73 வயதுடைய மற்றொரு நபரிடமிருந்து பெறப்பட்டுள்ளது. ஒரு நடைமுறை குறைபாடு (Procedure Lapse) எனக் கண்டறியப்பட்டது.

மேற்கண்ட நடைமுறை குறைபாடு கண்டறியப்பட்டதால், சம்பந்தப்பட்ட ச. கோவிந்தராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் / தலைமை வாக்கு பதிவு அலுவலர் மற்றும் M.முகமத், ஊர் நல அலுவலர் (RWO) / வாக்கு பதிவு அலுவலர்-1 ஆகியோர் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு முறையும் மற்றும் மேல்முறையீடுகளும்) விதி 17(பி) கீழ் கடும் தண்டனை பிரிவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட இரு அலுவலர்களும் உடனடியாக தேர்தல் தொடர்பான பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தபால் வாக்கு தொடர்பான பணிகளில் ஈடுபடும் அலுவலர்களும் மிகுந்த கவனத்துடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையத்தின் சக்ஷ்ம் (SAKSHAM) செயலி மூலம் மாற்றுத்திறனாளிக்கு உதவிகள் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும் பொழுது தேவைப்படும் சக்கர நாற்காலி, வாக்கு சாவடிக்கு வருவதற்கும் மற்றும் மீண்டும் வாக்களித்த பின் வீட்டிற்கு போய் சேர்வதற்கான போக்குவரத்து வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உதவியாளர் தேவை குறித்த அனைத்து விவரங்களும் சஷம் (SAKSHAM)ஆப்பில் பதிவு செய்தால் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்கு பதிவு செய்ய வரிசையில் நிற்க தேவையில்லை மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை (UDID) தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காட்டி விரைவாக வாக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது இதை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்கு பதிவு உறுதி செய்ய அனைத்து வசதிகளும் செய்துள்ளது 21 வகையான மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்கு பதிவு செய்யலாம் அதற்கான அணுகல் வசதி மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு பதிவு செய்ய தடைகள் ஏற்பட்டால் நமது சைகை மொழியில் உதவுவதற்கு சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் வீடியோ காலில் (WHATSAPP NUMBER - 7305158550) கட்டுப்பாட்டு அறையில் உள்ளார்கள் எனவே உங்களின் பிரச்சனை விரைவாக சீர் செய்து வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதர தேவைகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்: 18042508515 மூலம் தகவல் தெரிவிக்கலாம்.
80 வயது மேற்பட்டவர்கள் கடுமையான பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வாக்குசாவடி வர தேவையில்லை. அவர்களின் வீட்டிற்கே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சென்று வாக்கு பதிவை உறுதி செய்து பெற்றுக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு சாவடிகளிலும் தன்னார்வலர்களுடன் சக்கர நாற்காலி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications