2 குடுமியும் "அவர்" கையில்.. லகானை இறுக்கமாக பிடித்த அமித் ஷா.. அதிமுக + திமுக.. ஒரே நேரத்தில் செக்?
சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக, வடமாநிலங்களில் இருப்பது போல வலுவான கட்சியாக கொண்டு வருவதற்கான செயல்களில் பாஜக இறங்கிவிட்டதாக அக்கட்சிக்கு நெருக்கமான டெல்லி சோர்ஸ்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கம், தெலுங்கானா, பஞ்சாப், பீகார் போன்ற மாநிலங்களில் எல்லாம் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு அந்த இடங்களை பாஜகதான் பிடித்து உள்ளது. மாநில கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பின்னர், அந்த மாநில கட்சிகளை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடிப்பது.
பின்னர் ஆளும் கட்சியை கவிழ்த்து மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்பது என்ற பார்முலாவை பாஜக தீவிரமாக பின்பற்றி வருகிறது. இதே பார்முலாவை தமிழ்நாட்டிலும் பிரயோகப்படுத்த பாஜக தயாராகி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக உறுப்பினர் சேர்க்கை
அதன்படி ஒரு பக்கம் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கிராமங்கள் அளவில் வார்டு உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகளை பாஜக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அடுத்த 60 நாட்களில் ஒவ்வொரு வார்டுகளிலும் 5-6 புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகளை தமிழ்நாடு பாஜக கையில் எடுத்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலையும் இதற்காக பல்வேறு வார்டுகளில் சென்று பார்வையிட இருக்கிறார்.

அதிமுகவை ஓரம்கட்ட முடிவு
இந்த வார்டு உறுப்பினர் சேர்க்கை எல்லாம் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அதிமுகவை தனது வழிக்கு கொண்டு வரவும் பாஜக முயன்று வருகிறதாம். அதாவது தமிழ்நாட்டில் பாஜக சொல்வதைதான் கூட்டணியில் உள்ள அதிமுக கேட்க வேண்டும். கூட்டணியில் கேட்கும் இடங்களை கொடுக்க அதிமுக தயாராக இருக்க வேண்டும் என்ற நிலையை கொண்டு வர பாஜக முயன்று வருகிறதாம். ஆனால் இதற்குத்தான் எடப்பாடி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

முரண்டு பிடிக்கிறார்
அதிமுகதான் பெரிய கட்சி. இதில் பாஜகதான் நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும். தேசிய அளவில் பாஜக பெரிய கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பாஜகவிற்கு அட்ரஸ் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறாராம். எடப்பாடி பழனிசாமி இப்படி முரண்டு பிடிப்பதை டெல்லி பாஜக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எடப்பாடி தலைமையிலான அதிமுக வழிக்கு வரவில்லை என்றால் ஓ பன்னீர்செல்வத்தை அதிகரிக்கும் திட்டத்திலும் பாஜக இருக்கிறதாம்.

தேவைப்பட்டால் சின்னம் முடக்கம்
அதோடு இரட்டை இலை சின்ன வழக்கு இன்னும் முடிவிற்கு வரவில்லை. மேலும் பொதுக்குழு வழக்கும் முடிவிற்கு வரவில்லை. அதிமுக நமது பேச்சை கேட்டால் இதில் சுமுகமாக தீர்வு வரும்.இல்லையென்றால் வழக்கில் எடப்பாடிக்கு எதிரான தீர்ப்பே வரும் என்றும் டெல்லி பிரஷர் கொடுத்து இருக்கிறதாம். சுருக்கமாக சொன்னால் அதிமுகவின் குடுமி பாஜக கையில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் திமுகவை வீழ்த்தவும் பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறதாம்.

திமுக
திமுகவை சேர்ந்த மூத்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் சிலருக்கு எதிராக ஏற்கனவே கோர்டில் கேஸ் இருக்கிறது. இந்த கேஸ்களில் பெரிதாக முன்னேற்றம் ஏற்படவில்லை. திமுகவை அடக்கி வைப்பதற்கு இந்த வழக்குகளை தூசி தட்டும் திட்டத்திலும் பாஜக இருக்கிறதாம். பல மாநிலங்களில், மாநில கட்சிகளை அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் பாஜக ஒடுக்கி இருக்கிறது. சீக்கிரம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பக்கம் அமலாக்கத்துறை வரும்.

டெல்லி
வட மாநிலங்களில் இப்போதுதான் அமலாக்கத்துறை பணிகளை செய்து வருகிறது. அடுத்து தென் மாநிலங்கள்தான் என்று பாஜக தலைவர் அண்ணாமலையே வெளிப்படையாக பேசி இருக்கிறார். இதன் மூலம் விரைவில் தமிழ்நாட்டில் சில ரெய்டுகள் நடக்கலாம், வழக்குகள் தூசி தட்டப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் அதிமுக, திமுக என்ற இரண்டு பெரிய மாநில கட்சிகளுக்கு எதிராக பாஜக காய் நகர்த்த தயாராகி வருவதாக டெல்லி அரசியல் சோர்ஸ்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications