"பலவீனப்படுத்திட்டாங்க".. போட்டுடைத்த கே.எஸ் அழகிரி.. திமுகவிற்கு ரெட் சிக்னல்.. அப்போ அவ்வளவுதானா?
சென்னை: பேரறிவாளன் விடுதலை மற்றும் மற்ற 6 பேரின் விடுதலை தொடர்பான ஆலோசனைகள் காரணமாக திமுக - காங்கிரஸ் உறவில் நாளுக்கு நாள் விரிசல் ஏற்பட்டு வருகிறதாம்.
பேரறிவாளன் விடுதலையை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து உள்ளது. பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தினர்.
மாநிலம் முழுக்க பல முக்கிய இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டம் நடத்தப்பட்டது.
எங்களது இல்லத்திற்கு வந்த எங்களது பிள்ளை... பேரறிவாளன் குறித்து திமுக மூத்த தலைவர் 'சுப்பு' அக்கா!
அறிக்கை
அதோடு இந்த விடுதலைக்கு எதிராக கடுமையாக அறிக்கைகளை அக்கட்சி வெளியிட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில், கொலை செய்தவர்கள் தமிழர்கள் என்பதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சிறையில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விடுதலை செய்ய சொல்லி ஏன் யாரும் குரல் எழுப்பவில்லை. அவர்கள் எல்லாம் தமிழர்கள் கிடையாதா?. ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் மட்டும்தான் உங்களுக்கு தமிழர்களாக தெரிகிறார்களா.
பேரறிவாளன் விடுதலை
அவர்களை மட்டும்தான் விடுதலை செய்யும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை,என்றார். அதோடு திமுக தலைவர்களின் நிலைப்பாட்டை, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வைத்த வாதத்தையும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் எதிர்த்தனர். இந்த நிலையில்தான் பேரறிவாளன் போலவே மற்ற 6 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் நேற்று முதல்நாள் ஆலோசனை செய்தார்.
பாஜக திமுக
இந்த ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியை மேலும் அப்செட் ஆக்கி உள்ளது. கே.எஸ் அழகிரி மற்றும் காங்கிரசின் தொடர் விமர்சனங்கள் காரணமாக எங்கே காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா என்ற கேள்வியும் கூட எழுந்துள்ளது. ஏனென்றால் திமுகவும் சில விவகாரங்களில் பாஜகவுடன் சுமுகமாக செல்ல தொடங்கி உள்ளது. பல்லக்கு விவகாரத்தில் பாஜகவின் கோரிக்கைக்கு ஆளும் திமுக செவி சாய்த்தது. ஆளுநர் ரவியும் திமுக அரசின் நீட் மசோதாவை டெல்லிக்கு அனுப்பினார்.
6 பேர் விடுதலை
இது போக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறக்க தமிழ்நாடு வருகிறார். சோனியாவை அழைக்காமல் வெங்கையா நாயுடுவை ஸ்டாலின்அழைத்துள்ளார் . 28ம் தேதி இந்த நிகழ்வு நடக்க உள்ளது. அதோடு குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவை பெற பாஜக முயன்று வருகிறது. இப்படி பாஜகவுடன் திமுக நெருங்குவது போல தோன்றும் நிலையில்தான் காங்கிரஸ் - திமுக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேரறிவாளன் நிலைப்பாடு
இதில்தான் தற்போது பேரறிவாளன் விடுதலை புகைச்சலை அதிகப்படுத்தி உள்ளது. கே.எஸ் அழகிரி சமீபத்தில் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி கட்சிகளால் நாங்கள் வளரவில்லை. வலுவான கட்சிகளோடு கூட்டணி வைத்தால் நாங்களும் வளர வேண்டும். ஆனால் கூட்டணிகள் எங்களை பலவீனப்படுத்திவிட்டன. எங்களை வளர்த்துவிடவில்லை என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார். இப்படி கூட்டணி கட்சிகள் குறித்து வெளிப்படையாக கே.எஸ் அழகிரி குற்றஞ்சாட்டுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டணி என்ன ஆகும்?
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்கனவே பேரறிவாளன் விடுதலையும், 6 பேர் விடுதலை தொடர்பான ஆலோசனையும் மோதலை ஏற்படுத்தி உள்ள நிலையில்தான் அழகிரி இப்படி கூறி இருக்கிறார். இது போக 2024 லோக்சபா தேர்தலுக்கு தேசிய அளவில் கூட்டணி வைக்க தயாராகி வருகிறது திமுக. இதில் காங்கிரசை சேர்க்க மற்ற மாநில கட்சிகள் ஆர்வமாக இல்லை. ஆனால் இதுநாள் வரை திமுக காங்கிரசுடன் இணைந்து பயனாகவே விரும்பியது.
கேசிஆர், மம்தா
இந்த நிலையில்தான் தற்போது ஏற்பட்டுள்ள விரிசலால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றுமா என்று கேள்வி எழுந்துள்ளது. கேசிஆர், மமதா போல காங்கிரசை திமுக கைவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்ததில், பேரறிவாளன் விடுதலையை நாங்கள் ஏற்க மாட்டோம். அதேபோல் 6 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.. அவ்வளவுதான். ஆனால் இதனால் கூட்டணிக்கு பங்கம் வராது.
கூட்டணி உடையாது
திமுக 7 பேரை விடுதலை செய்ய போவதாக வாக்குறுதியிலேயே கூறிவிட்டது. தெரிந்துதான் கூட்டணி வைத்தோம். நாங்கள் இன்னும் நட்போடுதான் இருக்கிறோம் . அதனால் எதுவும் செய்ய முடியாது என்று காங்கிரஸ் தரப்பு கருதுகிறதாம். அதாவது திமுகவை எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்ப்போம். ஆனால் மோதல் வேண்டாம். பாஜகவை எதிர்க்க கூட்டணி அவசியம் என்று காங்கிரஸ் கருதுகிறதாம்.