பதம் பார்த்த "மாஸ்டர்மைண்ட்".. சைசாக எடப்பாடி பக்கம் ஒதுங்கும் காங்.. பார்த்தீங்களா? கசியும் டீலிங்!
சென்னை: அதிமுக விவகாரத்தில் திமுகவே பெரிதாக தலையிட்டுக்கொள்ளாத நிலையில்.. திடீரென காங்கிரஸ் கட்சி இந்த மோதலில் ஆர்வம் காட்டி வருகிறது. அதிலும் ஒற்றை தலைமைக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக பேசி வருகிறது.
Recommended Video
அதிமுகவில் எப்படியாவது ஒற்றை தலைமையை பெற்று விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். நம் சின்னத்தில் வேண்டுமானால் இரட்டை இல்லை இருக்கலாம்.. ஆனால் ஒரு தலைதான் இருக்க வேண்டும். அந்த தலை நானாகவே இருக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறாராம்.
ஆனால்.. எதுக்கு ஒற்றை தலைமை.. எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது.. இரட்டை தலைமையே இருக்கட்டுமே என்று ஓ பன்னீர்செல்வம் இன்னொரு பக்கம் புலம்பி வருகிறார்.
அதிமுக அதிகார யுத்தம்:புரட்சி பயணத்தை இன்று தொடங்குகிறார் சசிகலா- தடுக்குமா ஈபிஎஸ் கோஷ்டி?
என்ன நடக்கும்?
இந்த மோதல்கள்.. சண்டைகளில் ஆளும் திமுக தரப்பு தலையிட விரும்பவில்லை. ஓபிஎஸ் தரப்பில் இருந்து திமுகவை மத்தியசம் பேச அழைத்தும் கூட.. திமுக இதில் தலையிடவில்லை. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டுமா? வேண்டாமா என்பது பற்றி திமுக எதுவும் சொல்லவில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. தன் லைஃபில் பல பிரச்சனைகளை வைத்துக்கொண்டு பேஸ்புக்கில் நெட்டிசன்கள் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவது போலவே.. காங்கிரஸ் கட்சி தங்களுக்கு உள்ளாகவே கோஷ்டி மோதல்களை வைத்துக்கொண்டு திடீரென அதிமுகவிற்கு அறிவுரைகளை அள்ளி வீசி இருக்கிறது.
என்ன அறிவுரை
அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் சரியானது. எதிர்க்கட்சி வலுவாக இருப்பது அவசியம். அது மத்தியில் என்றாலும் சரி.. மாநிலத்தில் என்றாலும் சரி. அதிமுகவில் யார் இருக்க வேண்டும் என்பதை அக்கட்சி தொண்டர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். கட்சி ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட்டால் வலுவாக இருக்கும்... என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமையை எடப்பாடி கேட்கும் நிலையில்.. திருநாவுக்கரசு ஒற்றை தலைமையை வரவேற்று உள்ளார்.
கார்த்தி சிதம்பரம்
அதோடு கார்த்தி சிதம்பரம் எம்பி பேசுகையில், அதிமுகவில் தொண்டர்கள் எடப்பாடி பக்கம் நிற்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவரை ஒன்றும் செய்து விட முடியாது. எடப்பாடி பக்கம் ஆதரவாளர்கள் இருப்பதால் கோர்ட் வழக்கு எதுவும் செய்துவிடாது . அதனால் அவர்தான் ஒற்றை தலைமைக்கு தகுதியானவர் என்று நிரூபணம் ஆகி உள்ளது. அக்கட்சி ஒற்றை தலைமையை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறது, என்று குறிப்பிட்டார்.
ஆதரவு ஏன்?
இப்படி காங்கிரசின் டாப் நிர்வாகிகள் திடீரென ஒற்றை தலைமைக்கு ஆதரவாக பேசுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்ததில்.. காங்கிரஸ் கட்சி அதிமுக வலுவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதிமுக வலுவாக இருந்தால்தான் பாஜக அந்த இடத்தை பிடிக்காது. எதிர்கட்சிகளை வீழ்த்திவிட்டு பாஜக அந்த இடத்தை பிடிப்பது போல தமிழ்நாட்டிலும் ஆகிவிட கூடாது. வலுவான அதிமுக வேண்டும் என்பதால் ஒற்றை தலைமையை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆதரிக்கிறார்கள் என்று கதர் வேஷ்டியினர் கூறுகிறார்கள்.
இதுதான் காரணம்
அதே சமயம்.. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு மாஸ்டமைண்டாக இருக்கும் ஒருவர் போட்டுக்கொடுத்த திட்டம் இது என்றும் கூறப்படுகிறது. முன்பு அதிமுகவிற்கு நெருக்கமாக இருந்த இவர்.. எடப்பாடியுடன் மிகவும் நட்பாக இருந்தார். தற்போது காங்கிரஸ் மூலம் எடப்பாடியை ஆதரிக்க செய்து.. அவரின் தரப்பிற்கு வலு சேர்க்க இப்படி செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு திமுக போதிய இடங்களை கொடுக்கவில்லை என்றாலோ.. மூன்றாவது அணியில் திமுக இணைந்தாலோ அதிமுகவுடன் கூட்டணி வைக்க வசதியாக இப்போதே காங்கிரஸ் எடப்பாடி தரப்பிற்கு ஆதரவு தருகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
ராகுல் காந்தி
முன்னதாக அதிமுகவில் பொதுக்குழுவில் மோதல்கள் நடந்த நிலையில்.. அன்று மாலையே எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லியில் ராகுல் காந்தி போன் செய்ததாக கூறப்பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலிலும் என்ன முடிவு எடுக்க போகிறீர்கள் என்று எடப்பாடியிடம் ராகுல் கேட்டு இருக்கிறார்.அதிகாரபூர்வமாக நீங்கள் இப்போது பாஜக கூட்டணியில் இல்லை. அதனால் எதிர்க்கட்சி வேட்பளாரை நீங்கள் ஆதரிக்க வேண்டும். யஷ்வந்த் சின்காவை நீங்கள் ஆதரித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருக்கிறாராம் ராகுல் காந்தி. இந்த போன் காலில் ஒற்றை தலைமை பற்றியும் பேசப்பட்டதாக தெரிகிறது. இதன் பின்பே தற்போது காங்கிரஸ் நிர்வாகிகளும் ஒற்றை தலைமைக்கு ஆதரவாக பேச தொடங்கி உள்ளனர்.